கொரோனாவால் நாம் சீரழிவதற்கு நாம் தான் காரணம்.. அக்தரின் நியாயமான கோபம்

By karthikeyan VFirst Published Mar 27, 2020, 12:18 PM IST
Highlights

கொரோனாவால் உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பேரிழப்புகளுக்கும் கொரோனாவால் மனித குலம் பாதிக்கப்பட்டதற்கும் நாமே பொறுப்பு என்று ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், சில மாதங்களில் சர்வதேச அளவில் அதிவேகமாக பரவி மனித குலத்தையே அச்சுறுத்திவருகிறது. இத்தாலி, ஸ்பெய்ன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் கொரோனா கோர முகத்தை காட்டி, உயிர்களை காவு வாங்கிக்கொண்டிருக்கிறது.

உலகளவில் கொரோனாவின் பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது. கொரோனாவிற்கு பலியானோரின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்துவிட்டது. கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால், தனிமைப்படுதலே கொரோனாவிலிருந்து தப்பிப்பதற்கான சிறந்த வழி என்பதால் கொரோனா பாதிப்புள்ள அனைத்து நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிப்பதுடன், மேலும் பரவாமல் தடுக்க அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. 

கொரோனா எதிரொலியாக உலக பொருளாதாரமே முற்றிலுமாக முடங்கியுள்ளது. சமூக பொருளாதார நடவடிக்கைகள் அனைத்துமே முடங்கியுள்ளன. உலகமே ஸ்தம்பித்துள்ளது. இவையனைத்திற்கும் சீனர்களின் மோசமான உணவுப்பழக்கமே காரணம் என்று ஏற்கனவே அவர்களை கடுமையாக சாடியிருந்த அக்தர், மக்களுக்கு உணவுப்பழக்கவழக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்பத்தும் விதமாக ஒரு வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில்,  நாம் கொரோனாவை எதிர்த்து போரிட, நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் திறனும் சிறப்பாக இருக்க வேண்டும். நமது நுரையீரல் நல்ல கண்டிஷனில் இருக்க வேண்டும். ஆனால் நம்ம தான், நமது நோய் எதிர்ப்பு சிஸ்டத்தையே சிதைத்துவிட்டோமே.. ஜங்க் ஃபுட்களை சாப்பிட்டு மோசமான உணவுப்பழக்கத்தால் கடந்த 20 ஆண்டுகளில் நமது உடல் ஆரோக்கியத்தை கெடுத்துவிட்டோம். நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்திருக்குமேயானால், கொரோனா நம்மை அண்டியிருக்காது என்று தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுவதையும் சமூக விலகலையும் சீரியஸாக பின்பற்ற வேண்டும். இன்று உண்மையாகவே முக்கியமான ஒரு வேலையாக வெளியே செல்ல நேர்ந்தது. ஆனால் நான் யாரையும் தொடக்கூட இல்லை. எனது கார் கண்ணாடியை முழுவதுமாக மூடியிருந்தேன். அப்படி வெளியே சென்றுவரும்போது, சில காட்சிகளை காண நேர்ந்தது. 

ஒரு பைக்கில் 4 பேர் போகின்றனர். எந்தவித அத்தியாவசிய நோக்கமும் இல்லாமல் ஜாலியாக அந்த 4 பேரும் ஒரு பைக்கில் போய்க்கொண்டிருக்கின்றனர். மக்கள் வெளியே உணவு உண்கின்றனர். வெவ்வேறு இடங்களுக்கு பயணப்படுகின்றனர். ஹோட்டல்கள் எல்லாம் திறந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் மூட வேண்டும். மக்கள் விழிப்புணர்வுடன் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று அக்தர் தெரிவித்துள்ளார்.

click me!