உனக்கு நாட்டை விட பணம் தான் முக்கியமா போச்சுல.. டிவில்லியர்ஸை மானாவாரியா வெளுத்து வாங்கிய அக்தர்

By karthikeyan VFirst Published Jun 8, 2019, 1:12 PM IST
Highlights

டிவில்லியர்ஸை பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஷோயப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார். 

விறுவிறுப்பாக நடந்துவரும் உலக கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணி தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது. இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து தோல்வியை சந்தித்துள்ளது. 

உலக கோப்பை வரலாற்றில் தென்னாப்பிரிக்க அணி, முதன்முறையாக தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. உலக கோப்பை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பது தெரிந்தும், கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் திடீரென ஓய்வு அறிவித்தார். டிவில்லியர்ஸின் திடீர் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்க அணிக்கே பேரதிர்ச்சியாக இருந்தது.

ஆனாலும் அவரது இடத்திற்கு மற்றொரு வீரரரை தயார் செய்து உலக கோப்பையில் ஆடவைத்தது தென்னாப்பிரிக்க அணி. உலக கோப்பையில் தென்னாப்பிரிக்க அணியின் பவுலிங் தான் பெரிய பலமாக பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்டெய்ன், இங்கிடி ஆகியோரின் காயம் மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. ஸ்டெய்ன் காயம் காரணமாக உலக கோப்பை தொடரிலிருந்து முழுவதுமாக விலகிவிட்டார். இங்கிடி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. அவர்கள் இருவரும் இல்லாதது அந்த அணிக்கு பெரிய பாதிப்பு.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி தோற்றதும், டிவில்லியர்ஸ் குறித்த ஒரு தகவல் வெளியானது. டிவில்லியர்ஸ் உலக கோப்பையில் ஆடுவதற்கு விருப்பம் தெரிவித்தும்கூட, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அவரை ஏற்க மறுத்துவிட்டதாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ தெரிவித்திருந்தது. இந்த செய்தி காட்டுத்தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் விளக்கமளித்தது. டிவில்லியர்ஸ் உலக கோப்பையில் ஆட வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்தது உண்மை தான். ஓய்வு அறிவித்துவிட்டு ஓராண்டாக உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளில் ஆடாத டிவில்லியர்ஸை திடீரென உலக கோப்பை அணியில் எடுக்க முடியாது. கடந்த ஓரண்டாக டிவில்லியர்ஸின் இடத்தில் ஆடிய வீரரை ஒதுக்கிவிட்டு அவரை மீண்டும் அணியில் எடுப்பது சரியானது அல்ல. டிவில்லியர்ஸை மீண்டும் அணியில் சேர்க்காததால் அணி நிர்வாகத்துக்கு எந்த வருத்தமும் இல்லை என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. 

இந்நிலையில், டிவில்லியர்ஸை இந்த விவகாரத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஷோயப் அக்தர். இதுகுறித்து அக்தர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக டிவில்லியர்ஸ், ஐபிஎல் மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர்களில் இருந்து விலக வேண்டும் என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அழுத்தம் கொடுத்தது அனைவருக்கும் தெரிந்ததே. அதனால் ஐபிஎல்லில் ஆடுவதற்கு எந்த தடையும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அவர் ஓய்வே அறிவித்தார். 

தென்னாப்பிரிக்க அணி இன்றைக்கு அவரால் பெரும் சிக்கலில் இருக்கிறது. உலக கோப்பையில் தொடர் தோல்விகளை தழுவியுள்ளது. நாட்டை விட பணம் தான் முக்கியமாக போயிற்று. தென்னாப்பிரிக்க அணிக்கு டிவில்லியர்ஸ் தேவைப்படும் நேரத்தில் அவர் ஓய்வு பெற்றார். பணம் இன்று இல்லாவிட்டாலும் நாளைக்குக் கூட வரும். ஆனால் பணத்திற்காக உலக கோப்பையை உதறித் தள்ளிவிட்டார். 

ஒருநாள் உலக கோப்பை மற்றும் அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை என இரண்டு உலக கோப்பை தொடர்கள் நெருங்கிய நிலையில், அவர் ஓய்வு பெற்றார். அவர் திடீரென போனதால் தென்னாப்பிரிக்க மிடில் ஆர்டரே ஆட்டம் கண்டுள்ளது. டிவில்லியர்ஸ் நாட்டைவிட பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததால்தான் தென்னாப்பிரிக்க அணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. நாட்டை விட பணம் தான் முக்கியம் என அவர் கருதியது மிகவும் வருத்தமான சம்பவம் என்று அக்தர் டிவில்லியர்ஸை விளாசியுள்ளார். 
 

click me!