தோனி அடிச்ச அடிய பாத்து, சிஎஸ்கே தோற்றதையே மறந்த சாக்‌ஷி!

By Rsiva kumarFirst Published Apr 1, 2024, 10:28 AM IST
Highlights

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து கணவர் தோனி அடித்த அடியைப் பார்த்து சிஎஸ்கே தோற்றதையே மறந்துவிட்டேன் என்று சாக்‌ஷி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 13ஆவது ஐபிஎல் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் 52 ரன்களும், ரிஷப் பண்ட் 51 ரன்களும் எடுத்துக் கொடுத்தனர்.

பின்னர் 192 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் கெய்க்வாட் 1, ரச்சின் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அஜின்க்யா ரகானே மற்றும் டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி 3ஆவது விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்தனர். மிட்செல் 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ரகானே 45 ரன்களில் நடையை கட்டினார். சிக்ஸர் மன்னர் என்று அழைக்கப்படும் ஷிவம் துபே 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். சமீர் ரிஸ்வி ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினார். கடைசியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் எம்.எஸ்.தோனி இருவரும் இணைந்து அதிரடி காட்டினர். தோனி வந்த முதல் பந்திலேயே பவுண்டரி விளாச விசாகப்பட்டினத்தில் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். தோனி தோனி என்று கோஷம் எழுப்பினர்.

ஆனால், 2ஆவது பந்தில் அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஆஃப் சைடு பாய்ண்ட் திசையில் நின்றிருந்த கலீல் அகமது கோட்டைவிட்டார். சிஸ்கே 18 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 2 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 46 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், 19ஆவது ஓவரில் சிஎஸ்கே 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே வீசிய கடைசி ஓவரில் தோனி களத்தில் இருந்தார். அந்த ஓவரில் தோனி 4, 6, 0, 4, 0, 6 என்று வரிசையாக 20 ரன்கள் விளாசினார்.

கடைசி வரை களத்தில் நின்ற தோனி 16 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 37 ரன்கள் எடுத்தார். இறுதியாக சிஎஸ்கே 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் மட்டும் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதைத் தொடர்ந்து தோனியின் மனைவி சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிஎஸ்கே தோல்வி குறித்து கருத்து பதிவிட்டுள்ளார்.

முதலில் ரிஷப் பண்டுக்கு வாழ்த்துகள். ஹாய் மாஹி… உங்களது பேட்டிங்கால் சிஎஸ்கே தோல்வி அடைந்ததையே மறந்துவிட்டேன் என்று பதிவிட்டுள்ளார். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய தோனி எல்க்ட்ரிக் ஸ்ட்ரைக்கர் ஆஃப் தி மேட்ச் விருது வென்றார். இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றதன் மூலமாக இந்த சீசனில் முதல் வெற்றியை பெற்றுள்ளது. அதோடு, சிஎஸ்கே அணியின் ஹாட்ரிக் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

click me!