இந்தியா vs பாகிஸ்தான் போட்டி.. ரோஹித், கோலியை முன்கூட்டியே எச்சரித்த மாஸ்டர் பிளாஸ்டர்

By karthikeyan VFirst Published Jun 14, 2019, 3:40 PM IST
Highlights

உலக கோப்பை தொடரில் இந்திய அணி, அடுத்ததாக பாகிஸ்தானுடன் மோதவுள்ள நிலையில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரையும் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் முன்கூட்டியே எச்சரித்துள்ளார். 
 

உலக கோப்பை தொடரில் இந்திய அணி, அடுத்ததாக பாகிஸ்தானுடன் மோதவுள்ள நிலையில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரையும் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் முன்கூட்டியே எச்சரித்துள்ளார். 

இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் பறக்கும். இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் பேராவலுடன் அந்த போட்டியை பார்ப்பார்கள். அதிலும் இந்த முறை முதன்முறையாக உலக கோப்பையில் இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் பாகிஸ்தானுக்கு எதிரான கெத்தான ரெக்கார்டை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணியும் களமிறங்குவதால் போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

பாகிஸ்தான் அணி 4 போட்டிகளில் ஆடி வெறும் ஒரு வெற்றி மற்றும் கைவிடப்பட்ட ஒரு போட்டிக்கு ஒரு புள்ளி என மொத்தம் 3 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. இந்திய அணியோ முதலிரண்டு போட்டிகளிலுமே பெரிய அணிகளான தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளை வீழ்த்தியது. நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டி மழையால் ரத்தானதால் ஒரு புள்ளியை பெற்று 5 புள்ளிகளை பெற்றுள்ளது. 

எனவே உலக கோப்பை தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை தக்கவைக்க இந்திய அணியை வீழ்த்தியாக வேண்டிய நெருக்கடியில் உள்ளது பாகிஸ்தான் அணி. அதனால் அந்த அணி வெற்றிக்கு போராடும். ஆனால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை வீழ்த்துவது எளிதல்ல. 

இந்திய அணியின் மிகப்பெரிய பலமே டாப் ஆர்டர் பேட்டிங் தான். டாப் 3 பேட்ஸ்மேன்களில் ஒருவர் நிலைத்து ஆடினால் இந்திய அணியின் வெற்றி உறுதியாகிவிடும். காயம் காரணமாக தவான் ஆடமுடியாமல் போயிருப்பது இந்திய அணிக்கு இழப்புதான். எனினும் தவான் காயத்தால் ரோஹித்துடன் தொடக்க வீரராக களமிறங்க உள்ள ராகுல், தன்னை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக கண்டிப்பாக சிறப்பாகத்தான் ஆடுவார். எனினும் முக்கியமான பொறுப்பு ரோஹித் மற்றும் கோலியிடம் உள்ளது. 

வரும் 16ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்கவுள்ள நிலையில், ரோஹித் மற்றும் கோலிக்கு சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் ரோஹித்தும் விராட் கோலியும் அனுபவ வீரர்கள். எனவே அவர்கள் இருவரையும் விரைவில் வீழ்த்த முனைவார்கள் பாகிஸ்தான் பவுலர்கள். வஹாப் ரியாஸும் அமீரும் கோலி மற்றும் ரோஹித்தின் விக்கெட்டை விரைவில் எடுக்க நினைப்பார்கள். இது ரோஹித்துக்கும் கோலிக்கும் தெரியும். எனவே இருவரும் பெரிய இன்னிங்ஸ் ஆடுவதில் உறுதியாக இருப்பார்கள். ரோஹித் மற்றும் கோலியை சுற்றித்தான் மற்ற வீரர்கள் ஆட வேண்டும். ரோஹித்தும் கோலியும் களத்தில் நிலைத்து நின்று பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார். 
 

click me!