
கவுகாத்தி டெஸ்டின் நான்காம் நாளில் இந்திய பந்துவீச்சாளர்களை தென்னாப்பிரிக்க பேட்டர்கள் கடுமையாக சோதித்த நிலையில், தென்னாப்பிரிக்க தலைமைப் பயிற்சியாளர் சுக்ரி கான்ராடின் 'க்ரோவல்' (Grovel) பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வார்த்தையின் பயன்பாடு சனிக்கிழமை பல பத்திரிகையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது. கிரிக்கெட்டில் 'க்ரோவல்' (ஒரு அணியை முற்றிலும் கையறு நிலையில் அவமானப்படுத்தி தோற்கடிப்பது) என்ற வார்த்தை இனவெறி அல்லாத அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டாலும், அதற்கு வரலாற்று ரீதியாக மிகப்பெரிய முக்கியத்துவம் உள்ளது.
1976-ல் வெஸ்ட் இண்டீஸில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்தபோது, தென்னாப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து கேப்டன் டோனி கிரெய்க், தனது அணி வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை 'க்ரோவல்' செய்ய வைக்கும் என்று அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அக்கால இனவெறி அரசியல் மற்றும் விளையாட்டின் காலனித்துவ வரலாறு காரணமாக, இந்த அறிக்கை இனரீதியாக அவதூறாகக் கருதப்பட்டது. இதைத் தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி, கிரிக்கெட் வரலாற்றின் போக்கையே மாற்றியது.
நான்காம் நாள் ஆட்டத்திற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் கான்ராட் தனது கருத்தை மறைக்கவில்லை. ஆனால், தன்னை 'ஒரு வாக்கியத்தை திருடுகிறேன்' என்றும் அவர் குறிப்பிட்டார். 'இந்திய வீரர்கள் களத்தில் அதிக நேரம் செலவிட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். ஒரு வாக்கியத்தை திருடிச் சொல்வதானால், அவர்கள் உண்மையிலேயே 'க்ரோவல்' செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். மைதானத்திலேயெ இந்திய வீரர்கள் மண்டியிடும் வரை டிக்கேளர் கொடுக்கக்கூடாது என நினைத்தோம். அவர்களை ஆட்டத்தில் இருந்து முழுமையாக வெளியேற்றி, கடைசி நாளிலும், இன்று மாலையும் ஒரு மணி நேரம் வந்து தாக்குப்பிடிக்க வேண்டும் என்று நாங்கள் அவர்களிடம் கூறினோம்,' என்று கான்ராட் கூறினார். கான்ராடின் இந்த கருத்து இந்திய ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.