கெய்க்வாட் சதம், பாபா அபரஜித் அரைசதம்.. இந்தியா பி சிறப்பான பேட்டிங்

By karthikeyan VFirst Published Oct 31, 2019, 11:43 AM IST
Highlights

தியோதர் டிராபி தொடரின் முதல் போட்டி இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகளுக்கு இடையே நடந்துவருகிறது. 
 

ஹனுமா விஹாரி தலைமையிலான இந்தியா ஏ அணி மற்றும் பார்த்திவ் படேல் தலைமையிலான இந்தியா பி அணி ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி ராஞ்சியில் இன்று காலை எட்டே முக்கால் மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி, இந்தியா பி அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பிரியங்க் பன்சால் ஆகிய இருவரும் களமிறங்கினர். பிரியங்க் பன்சால் 3 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் கெய்க்வாட்டுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி சேர்ந்தார். 

இவர்கள் இருவரும் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்துக்கொண்டிருந்த நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கெய்க்வாட்டுடன் தமிழ்நாடு வீரர் பாபா அபரஜித் ஜோடி சேர்ந்தார். பாபா விஜய் ஹசாரேவில் அபாரமாக ஆடியிருந்தார். இந்த போட்டியிலும் கெய்க்வாட்டுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடிவருகிறார். 

கெய்க்வாட்-பாபா அபரஜித் ஜோடி பொறுப்புடன் ஆடி இந்தியா ஏ அணியின் ஸ்கோரை உயர்த்தியது. கெய்க்வாட் சதமடிக்க, பாபா அபரஜித்தும் அரைசதம் அடித்தார். அரைசதத்திற்கு பின்னர் பாபா அபரஜித் அதிரடியாக ஆடிவருகிறார். 40 ஓவர் முடிவில் இந்தியா ஏ அணி 205 ரன்கள் அடித்துள்ளது. பாபா 64 ரன்கள் அடித்துள்ளார். சதத்திற்கு இன்னும் 36 ரன்களே தேவை என்பதால் அவரும் சதமடிக்கும் வாய்ப்புள்ளது. கெய்க்வாட் சதத்திற்கு பின்னரும் நன்றாக ஆடிவருகிறார். 
 

click me!