ரோஹித் சர்மாவின் சர்ச்சை விக்கெட்.. தேர்டு அம்பயரை தெறிக்கவிடும் ரசிகர்கள்

By karthikeyan VFirst Published Jun 27, 2019, 5:10 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடந்துவரும் போட்டியில் ரோஹித் சர்மாவின் விக்கெட் கடும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. 

உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸும் ஆடிவருகின்றன. 

மான்செஸ்டரில் நடந்துவரும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக ஆடிய அதே அணியுடன் தான் இந்திய அணி ஆடிவருகிறது. 

தொடக்க வீரர்கள் ரோஹித்தும் ராகுலும் நிதானமாக தொடங்கி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் பொறுமையாகவே தொடங்கினர். முதல் 5 ஓவர்களில் அமைதி காத்த ரோஹித் சர்மா, கீமார் ரோச் வீசிய ஆறாவது ஓவரின் இரண்டாவது பந்தில் தனது டிரேட்மார்க் ஷாட்டான புல் ஷாட்டின் மூலம் அபாரமான ஒரு சிக்ஸரை விளாசினார். அதே ஓவரிலேயே ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ராகுலுடன் கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்து கொண்டிருந்த நிலையில் ராகுல் 48 ரன்களில் ஹோல்டரின் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். இதையடுத்து கோலியுடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.

இந்த போட்டியில் ரோஹித்தின் விக்கெட் கடும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. ரோச் வீசிய ஆறாவது ஓவரின் கடைசி பந்து ரோஹித்தின் பேட்டுக்கும் கால்காப்புக்கும் இடையே புகுந்து விக்கெட் கீப்பரிடம் சென்றது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அப்பீல் செய்ய அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணி நம்பிக்கையுடன் ரிவியூ எடுத்தது. 

ரீப்ளேவில் எளிதாக கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மிகவும் க்ளோசாக இருந்தது. பேட்டும் கால்காப்பும் ஒரே நேர்கோட்டில் இருந்ததால் பந்து பேட்டில் முதலில் பட்டதா அல்லது கால்காப்பில் பட்டதா என்பதை கண்டறிய மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் தேர்டு அம்பயர் அவுட் கொடுத்துவிட்டார். மிகவும் சர்ச்சைக்குள்ளான வகையில் ரோஹித்துக்கு அவுட் கொடுத்த தேர்டு அம்பயர் மைக்கேல் காஃபை நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சித்துவருகின்றனர். 
 

click me!