தோனியும் கேதரும் மொக்கையா ஆடுனதுக்கு இதுதான் காரணம்.. ரோஹித் சர்மா அதிரடி

By karthikeyan VFirst Published Jul 1, 2019, 12:34 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோனி - கேதர் ஜாதவ் ஜோடியின் மந்தமான பேட்டிங் குறித்து இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோனி - கேதர் ஜாதவின் மந்தமான மற்றும் எந்தவொரு நோக்கமுமே இல்லாத பேட்டிங் பெரிய பெரிய ஜாம்பவான்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர் முடிவில் 337 ரன்களை குவித்தது. 338 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் டக் அவுட்டாகி வெளியேற, ரோஹித்தும் கோலியும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடி நம்பிக்கையளித்தனர். அவர்கள் இருவரும் ஆட்டமிழந்தபிறகு ரிஷப் பண்ட்டும் ஹர்திக் பாண்டியாவும் அதிரடியாக  ஆடினர். 

ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டுக்கு பிறகு அனைவருக்கும் அதிர்ச்சி தான் காத்துக்கொண்டிருந்தது. ஹர்திக் பாண்டியா 45வது ஓவரில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் தோனியும் கேதரும் ஆடிய ஆட்டம், இப்படியெல்லாம் கூட ஆடமுடியுமா என்று அனைவரையும் வியப்படைய செய்தது. ஹர்திக் பாண்டியா அவுட்டான போது 45 ஓவர் முடிவில் இந்திய அணி 267 ரன்கள் அடித்திருந்தது. 

கடைசி 5 ஓவர்களில் இந்திய அணிக்கு 71 ரன்கள் தேவைப்பட்டது. அடிப்பதற்கு கடினமான இலக்குதான் என்றாலும் அதை அடிக்க முயற்சியாவது செய்திருக்க வேண்டும். கடைசி 5 ஓவர்களில் அடிப்பதற்கு முயற்சி கூட செய்யவில்லை. இங்கிலாந்து பவுலர்கள், பந்துகளை மிகவும் மெதுவாக வீசி அடிக்கவிடாமல் செய்தனர். ஆனால் அடித்து ஆடமுடியாததற்கு அதை காரணமாக சொல்லமுடியாது. அடித்து ஆட முயற்சி செய்து, சரியாக அடித்து ஆடமுடியவில்லை என்று காரணம் சொல்லலாம். ஆனால் தோனியும் கேதரும் முயற்சியே செய்யவில்லை. இருவரும் இலக்கை விரட்டுவதற்காக ஆடுகிறார்களா அல்லது ஓவரை முடிப்பதற்காக கடமைக்காக ஆடுகிறார்களா என்ற யோசிக்கும் அளவிற்கு ஆடினர். 

கடைசி 5 ஓவர்களில் 6 டாட் பந்துகள். கடைசி 30 பந்துகளில் அடிக்கப்பட்ட ரன் வெறும் 39 மட்டுமே. தோனி - கேதர் ஜோடியின் ஆட்டம் அனைவரையுமே அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. தோனி கேதர் ஜோடியின் மந்தமான பேட்டிங், நாசர் ஹுசைன், கங்குலி, மெக்கல்லம், வெட்டோரி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பலரையும் வியப்படைய செய்தது. முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் அதிருப்தியடைந்தனர். 

ஆனால் தோனி - கேதர் ஜோடியின் மோசமான பேட்டிங்கை விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் நியாயப்படுத்தத்தான் முயல்கின்றனர். போட்டிக்கு பின்னர் பேசிய கேப்டன் கோலி நியாயப்படுத்தினர். அதன்பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ரோஹித்தும் அதையேதான் செய்தார். தோனி - கேதர் ஜோடியின் பேட்டிங் குறித்து பேசிய ரோஹித் சர்மா, தோனியும் கேதரும் பவுண்டரிகளை அடிக்க முயன்றனர். ஆனால் ஆடுகளம் மந்தமாக இருந்ததால் அதை நன்றாக பயன்படுத்திக்கொண்ட இங்கிலாந்து பவுலர்கள், அதிகமான பந்துகளை மெதுவாகவே வீசி பெரிய ஷாட்டுகளை அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தினர். அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து பவுலர்களின் லைன் அண்ட் லெந்த் கணிப்பதற்கு கடினமாக இருந்தது என்று ரோஹித் தெரிவித்துள்ளார். 

click me!