சாதனைங்குறது ஒரு டீமுக்கு எதிராதான் பண்ணனுங்குறது இல்ல.. எதிரணியுடன் சேர்ந்து கூட பண்ணலாம்.. ரோஹித் - மயன்க் - எல்கர் சேர்ந்து செய்த சாதனை

By karthikeyan VFirst Published Oct 5, 2019, 12:12 PM IST
Highlights

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால் மற்றும் டீன் எல்கர் ஆகிய மூவரும் இணைந்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சாதனையை படைத்துள்ளனர். 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 502 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி 431 ரன்களை குவித்தது. 

இதையடுத்து 71 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடிவரும் இந்திய அணி, நான்காம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் அடித்துள்ளது. ரோஹித்தும் புஜாராவும் களத்தில் உள்ளனர். 

இந்திய அணியில் முதன்முறையாக தொடக்க வீரராக இறங்கிய ரோஹித் சர்மா அபாரமாகவும் தெளிவாகவும் ஆடினார். எந்த சூழலிலும் தடுமாறாமல் மிகத்தெளிவாக ஆடி சதமடித்தார். 176 ரன்களை குவித்த ரோஹித் சர்மா, இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு ஆட்டமிழந்தார். டெஸ்ட் அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க துடித்துக்கொண்டிருந்த ரோஹித் சர்மாவுக்கு இது ரொம்ப முக்கியமான இன்னிங்ஸ். 

அதேபோல தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவரும் மற்றொரு தொடக்க வீரரான மயன்க் அகர்வால், ரோஹித் விட்டதை பிடித்தார். ஆம்.. ரோஹித் 24 ரன்களில் தவறவிட்ட இரட்டை சதத்தை மயன்க் தவறவிடவில்லை. நிதானமாக ஆடி இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை விளாசினார் மயன்க் அகர்வால்.

ரோஹித்தும் மயன்க் அகர்வாலுமாவது ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தபோது சிறப்பாக ஆடி சதமடித்தனர். ஆனால் ஆடுகளத்தில் பந்து நன்றாக திரும்ப தொடங்கிய பிறகு, ஸ்பின்னிற்கு சாதகமான ஆடுகளத்தில், தரமான ஸ்பின்னர்களை எதிர்கொண்டு அபாரமாக ஆடினார் எல்கர். அதுவும் ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்து, அணி நெருக்கடியான சூழலில் இருந்தபோது அபாரமாக ஆடி சதமடித்தார். சதத்திற்கு பின்னரும் 60 ரன்களை குவித்து பெரிய இன்னிங்ஸை ஆடினார் எல்கர். 160 ரன்களை குவித்தார் எல்கர். இவரது ஆட்டம்தான் தென்னாப்பிரிக்க அணியை தூக்கி நிறுத்தியது. 

ரோஹித், மயன்க் அகர்வால் மற்றும் எல்கர் ஆகிய மூவரும் 150 ரன்களுக்கு மேல் அடித்ததன் மூலம் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 3 தொடக்க வீரர்கள்(ஆடும் இரு அணிகளிலும் சேர்த்து) 150 ரன்களுக்கு மேல் குவித்தது இதுதான் நான்காவது முறை. இதற்கு முன் மூன்று முறை மட்டுமே இந்த சம்பவம் நடந்துள்ளது. மயன்க், ரோஹித், எல்கர் ஆகிய மூன்று தொடக்க வீரர்களும் 150 ரன்களுக்கு மேல் குவித்து இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். 
 

click me!