இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த மாத்திரத்திலேயே தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை கடுமையாக சாடியுள்ளார் முன்னாள் வீரர்.
இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துடன் முடிவடைகிறது.
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் மற்றும் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் பயிற்சியாளர்களுக்கான பதவிக்காக விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ. இதையடுத்து ஜெயவர்தனே, டாம் மூடி, மைக் ஹெசன் ஆகியோர் விண்ணப்பிப்பதாக தகவல்கள் வெளியாகின.
ஃபீல்டிங் பயிற்சியாளர் பொறுப்புக்கு ஜாண்டி ரோட்ஸ் விண்ணப்பித்துள்ளார். அதன்பிறகு உறுதியான தகவல் என்றால் அது, ராபின் சிங் விண்ணப்பித்ததுதான். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ராபின் சிங் விண்ணப்பித்துள்ளார். ராபின் சிங் ஏற்கனவே 2007ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு வரையிலான 2 ஆண்டுகள் இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
இந்நிலையில், அவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த மாத்திரத்திலேயே ரவி சாஸ்திரியை வறுத்தெடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய ராபின் சிங், இப்போது இருக்கு பயிற்சியாளரின் கீழ் இரண்டு அடுத்தடுத்த உலக கோப்பைகளில் இந்திய அணி அரையிறுதியுடன் வெளியேறியுள்ளது. டி20 உலக கோப்பையிலும் சரியாக ஆடவில்லை.
எனவே 2023 உலக கோப்பையை மனதில்வைத்து அதிரடியான மாற்றங்களை செய்ய வேண்டிய தருணம் இது. மனதளவில் ஆட்டத்திற்குள் ஆழ்ந்து செல்ல வேண்டும். அணி இருக்கும் நிலையை கருத்தில்கொண்டு வீரர்களின் முகத்தைப் பார்த்து அவர்களின் மனநிலையை புரிந்துகொண்டு, முக்கியமான முடிவுகளை எடுக்க உதவ வேண்டும். வீரர்களின் மனநிலையை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். ஆட்டத்தில் டெக்னிக்கலாக ஸ்ட்ராங்கா இருந்தால் மட்டுமே இதையெல்லாம் செய்ய முடியும் என்று ராபின் சிங் தெரிவித்துள்ளார்.