இந்திய அணியின் சிக்கலுக்கு இவர்தான் தீர்வு.. பாண்டிங் அதிரடி

By karthikeyan VFirst Published Mar 20, 2019, 12:37 PM IST
Highlights

உலக கோப்பையில் இந்திய அணி நான்காம் வரிசையில் யாரை இறக்கலாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆலோசனை தெரிவித்துள்ளார். 
 

உலக கோப்பையில் இந்திய அணி நான்காம் வரிசையில் யாரை இறக்கலாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆலோசனை தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டனர். எஞ்சிய 2-3 வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட வேண்டும்.

இந்திய அணியின் முதல் மூன்று வீரர்கள் வலுவாக உள்ளனர். ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரும் டாப் ஆர்டரில் வலு சேர்க்கின்றனர். தோனி, கேதர், ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரும் முறையே 5,6,7 ஆகிய வரிசைகளில் களமிறங்குவர். 

ஓரளவிற்கு அணி உறுதி செய்யப்பட்டுவிட்டாலும், பேட்டிங் ஆர்டரில் முக்கியமான 4ம் வரிசை வீரர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 4ம் வரிசைக்கு ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, தோனி உட்பட ஏராளமான வீரர்களை களமிறக்கி பரிசோதித்த இந்திய அணி, ஒருவழியாக ராயுடுவை உறுதி செய்தது. 

ராயுடுவும் ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய தொடர்களில் நன்றாக ஆடினார். இதையடுத்து ராயுடுதான் உலக கோப்பையில் நான்காம் வரிசையில் இறங்கப்போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், அண்மையில் இந்தியாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ராயுடு சோபிக்கத்தவறினார். முதல் மூன்று போட்டிகளில் சரியாக ஆடவில்லை. 3 போட்டிகளிலும் சேர்த்தே வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார். 

3 போட்டிகளில் சொதப்பியதால், கடைசி 2 போட்டிகளில் ராயுடு அதிரடியாக நீக்கப்பட்டார். ராயுடுவின் நீக்கம், 4ம் வரிசைக்கு வேறு வீரரை இந்திய அணி தேடுகிறது என்ற தகவலை உணர்த்துவதாக அமைந்தது. உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், இன்னும் 4ம் வரிசை வீரர் உறுதி செய்யப்படாதது, இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

நான்காம் வரிசை வீரர் இன்னும் உறுதி செய்யப்படாததால் பல முன்னாள் வீரர்கள் இந்திய அணியின் 4ம் வரிசை சிக்கலுக்கு தங்களது பரிந்துரைகளை தெரிவித்துவருகின்றனர். 

இதற்கிடையே விஜய் சங்கரை நான்காம் வரிசையில் இறக்குவது குறித்து அணி நிர்வாகம் தீவிரமாக பரிசீலித்துவருவதாக தெரிகிறது. மிடில் ஆர்டரில் இதுவரை விஜய் சங்கர் நன்றாகவே ஆடியுள்ளார். சூழலுக்கு ஏற்றவாறு ஆடுகிறார். அதுமட்டுமல்லாமல் அவரை அணியில் எடுத்தால் மிடில் ஓவர்களில் 4-5 ஓவர்கள் வீச பார்ட் டைம் பவுலிங் ஆப்சனும் கிடைக்கும். அந்த வகையில் விஜய் சங்கரின் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 

ஐபிஎல்லில் டெல்லி கேபிடள்ஸ் அணியின் ஆலோசகராக உள்ள கங்குலி, தான் ஏற்கனவே பரிந்துரைத்த புஜாராவை எடுக்க முடியாத பட்சத்தில் ரிஷப் பண்ட்டை அந்த வரிசையில் இறக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளார். 

டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரிக்கி பாண்டிங்கும் ரிஷப் பண்ட்டின் பெயரை பரிந்துரைத்துள்ளார். ரிஷப் பண்ட்டை நான்காம் வரிசையில் இறக்கலாம் எனவும் இந்திய அணிக்கு உலக கோப்பையை வெல்ல உதவிகரமாக ரிஷப் பண்ட் இருப்பார் எனவும் பாண்டிங் தெரிவித்துள்ளார். 
 

click me!