புஜாராவை எடுக்கலைனா அவரை 4ம் வரிசையில் இறக்குங்க!! தாதாவின் தடாலடி தேர்வு

By karthikeyan VFirst Published Mar 20, 2019, 10:51 AM IST
Highlights

இந்திய அணியின் தீராத பிரச்னையாக இருந்துவரும் 4ம் வரிசை பேட்டிங்கிற்கு புஜாராவை பரிந்துரைத்திருந்தார் கங்குலி. புஜாராவை எடுப்பது சாத்தியமில்லை என்றால், தனது அடுத்த தேர்வு யார் என்பதை தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டனர். எஞ்சிய 2-3 வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட வேண்டும்.

இந்திய அணியின் முதல் மூன்று வீரர்கள் வலுவாக உள்ளனர். ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரும் டாப் ஆர்டரில் வலு சேர்க்கின்றனர். தோனி, கேதர், ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரும் முறையே 5,6,7 ஆகிய வரிசைகளில் களமிறங்குவர். 

ஓரளவிற்கு அணி உறுதி செய்யப்பட்டுவிட்டாலும், பேட்டிங் ஆர்டரில் முக்கியமான 4ம் வரிசை வீரர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 4ம் வரிசைக்கு ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, தோனி உட்பட ஏராளமான வீரர்களை களமிறக்கி பரிசோதித்த இந்திய அணி, ஒருவழியாக ராயுடுவை உறுதி செய்தது. 

ராயுடுவும் ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய தொடர்களில் நன்றாக ஆடினார். இதையடுத்து ராயுடுதான் உலக கோப்பையில் நான்காம் வரிசையில் இறங்கப்போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், அண்மையில் இந்தியாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ராயுடு சோபிக்கத்தவறினார். முதல் மூன்று போட்டிகளில் சரியாக ஆடவில்லை. 3 போட்டிகளிலும் சேர்த்தே வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார். 

3 போட்டிகளில் சொதப்பியதால், கடைசி 2 போட்டிகளில் ராயுடு அதிரடியாக நீக்கப்பட்டார். ராயுடுவின் நீக்கம், 4ம் வரிசைக்கு வேறு வீரரை இந்திய அணி தேடுகிறது என்ற தகவலை உணர்த்துவதாக அமைந்தது. உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், இன்னும் 4ம் வரிசை வீரர் உறுதி செய்யப்படாதது, இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

நான்காம் வரிசை வீரர் இன்னும் உறுதி செய்யப்படாததால் பல முன்னாள் வீரர்கள் இந்திய அணியின் 4ம் வரிசை சிக்கலுக்கு தங்களது பரிந்துரைகளை தெரிவித்துவருகின்றனர். 

இதற்கிடையே விஜய் சங்கரை நான்காம் வரிசையில் இறக்குவது குறித்து அணி நிர்வாகம் தீவிரமாக பரிசீலித்துவருவதாக தெரிகிறது. மிடில் ஆர்டரில் இதுவரை விஜய் சங்கர் நன்றாகவே ஆடியுள்ளார். சூழலுக்கு ஏற்றவாறு ஆடுகிறார். அதுமட்டுமல்லாமல் அவரை அணியில் எடுத்தால் மிடில் ஓவர்களில் 4-5 ஓவர்கள் வீச பார்ட் டைம் பவுலிங் ஆப்சனும் கிடைக்கும். அந்த வகையில் விஜய் சங்கரின் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 

கங்குலி ஏற்கனவே நான்காம் வரிசைக்கு புஜாராவின் பெயரை பரிந்துரைத்திருந்தார். புஜாராவின் ஃபீல்டிங் ஒரு மைனஸ் தான் என்றாலும், இதுவரை இந்திய அணி பரிசோதித்த 4ம் வரிசை வீரர்களை விட புஜாரா நல்ல தேர்வாக இருப்பார் என்றும் தெரிவித்திருந்தார். மேலும்  ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் செய்த பணியை புஜாராவால் செய்ய முடியும் என கங்குலி நம்பிக்கை தெரிவித்திருந்தார். 

ஆனால் புஜாரா உலக கோப்பை அணியில் எடுக்கப்படுவதற்கான சாத்தியமே கிடையாது. டெல்லி கேபிடள்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வரும் கங்குலி, புஜாராவை அணியில் எடுப்பது சாத்தியமில்லாத பட்சத்தில், தனது இரண்டாவது தேர்வை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கங்குலி, 4ம் வரிசைக்கு நிறைய ஆப்சன்கள் உள்ளன. ஆனால் ஐபிஎல்லும் 4ம் வரிசை வீரரை கண்டறிய உதவும் என கருதுகிறேன். புஜாரா நல்ல ஃபார்மில் இருக்கிறார். நான் கேப்டனாக இருந்தபோது இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு ராகுல் டிராவிட் செய்ததை தற்போது 4ம் வரிசையில் இறங்கி புஜாராவால் செய்ய முடியும் என நம்பியதால் அவரது பெயரை பரிந்துரைத்தேன். அவரை எடுப்பது சாத்தியமில்லை என்றால், நான்காம் வரிசையில் ரிஷப் பண்ட் - ராயுடு ஆகிய இருவரில் ஒருவரை இறக்கலாம். நாம் என்னதான் பரிந்துரைகளை அள்ளி எறிந்தாலும், யார் நான்காம் வரிசையில் இறங்கப்போவது என்பதை கேப்டன் கோலிக்கு இந்நேரம் தெரிந்திருக்கும் என்றும் கங்குலி தெரிவித்துள்ளார். 
 

click me!