
இந்திய அணியின் சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய ஸ்கோர் அடிக்கமுடியாமல் திணறிவருகின்றனர். ஆனாலும் அவர்களது திறமையின் மீதான நம்பிக்கை மற்றும் கடந்த காலங்களில் அவர்கள் அணிக்கு அளித்த பங்களிப்பு ஆகியவற்றின் விளைவாக அவர்களுக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படுகிறது.
இதற்கிடையே, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி ஆகிய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் அபாரமாக ஆடிவருகின்றனர். சீனியர் வீரர்களான புஜாரா, ரஹானே மீது இவர்கள் அழுத்தம் போடுகின்றனர்.
இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் கண்டிப்பாக சிறப்பாக ஆடியாக வேண்டிய கட்டாயத்தில் பேட்டிங் ஆடிய புஜாராவும் ரஹானேவும் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தனர். இந்திய அணியில் இடத்தை தக்கவைக்க நல்ல இன்னிங்ஸ் ஒன்று தேவை என்ற கட்டாயத்தில், அந்த இன்னிங்ஸில் சிறப்பாக ஆடினர். ஆனால் அதே இன்னிங்ஸில் ஹனுமா விஹாரியும் அபாரமாக பேட்டிங் ஆடி அவர்களுக்கு டஃப் கொடுத்தார். 40 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார் விஹாரி.
ஆனாலும் கேப்டவுனில் நடக்கும் 3வது டெஸ்ட்டில் கோலி வந்துவிட்டால் யார் நீக்கப்படுவார் என்பது தான் பெரும் கேள்வியாக உள்ளது. கோலிக்கு பதிலாக சேர்க்கப்பட்ட விஹாரி தான் பெரும்பாலும் நீக்கப்படுவார். ரஹானே - புஜாரா ஆகிய இருவருக்குமே வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ரிதீந்தர் சிங் சோதி, இந்திய அணி காம்பினேஷனை பொறுத்தமட்டில் அஜிங்க்யா ரஹானே - ஹனுமா விஹாரி ஆகிய இருவரில் ஒருவருக்கு மட்டுமே அணியில் இடம் கிடைக்கும். விஹாரி எந்த தவறும் செய்யவில்லை; மிக முக்கியமான இன்னிங்ஸை அவர் ஆடினார். அதேவேளையில், ரஹானே அணியில் இடம்பெறவில்லை என்றால் அது மிகப்பெரிய முடிவாக இருக்கும். ரஹானேவும் ஸ்கோர் செய்திருக்கிறார். ஒருவேளை ரஹானே மீண்டும் ஆட வாய்ப்பு பெற்றால், அது அவருக்கு கிடைத்த கூடுதல் வாய்ப்புதான். ரஹானே அவரது இடத்தை தக்கவைக்க கடைசி டெஸ்ட்டில் சிறப்பாக ஆடியாக வேண்டும் என்று ரிதீந்தர் சிங் சோதி தெரிவித்துள்ளார்.