
விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகல்:
ஐபிஎல் 15வது சீசன் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. கடந்த ஐபிஎல் சீசன் முடிந்ததுமே, ஆர்சிபி கேப்டன் பதவியிலிருந்து விலகினார் விராட் கோலி. 2013ம் ஆண்டிலிருந்து ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்துவந்த விராட்கோலி, ஒருமுறை கூட ஐபிஎல் டைட்டிலை ஜெயிக்கவில்லை. அதுவே அவர் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
கடந்த 2 ஆண்டுகளாக விராட் கோலி பெரிய ஸ்கோர் எதுவும் செய்யாத நிலையில், பேட்டிங்கில் கவனம் செலுத்தும் விதமாக இந்திய அணியின் கேப்டன்சி, ஆர்சிபி கேப்டன்சி என அவர் வகித்த அனைத்து கேப்டன்சியிலிருந்தும் விலகினார்.
ஐபிஎல் 15வது சீசனிலிருந்து ஆர்சிபி அணியில் விராட் கோலி ஒரு சாதாரண வீரராக ஆடவுள்ளார். எனவே ஐபிஎல் 15வது சீசனில் புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஆர்சிபி அணி, ஏலத்தில் டுப்ளெசிஸ், தினேஷ் கார்த்திக் ஆகிய கேப்டன்சிக்கான வீரர்களை எடுத்தது. ஆனால் இவர்களை விட, ஆர்சிபி அணி ஏலத்திற்கு முன் தக்கவைத்த க்ளென் மேக்ஸ்வெல்லை கேப்டனாக நியமிப்பதற்கான வாய்ப்புதான் அதிகம் உள்ளது.
புதிய கேப்டன்:
தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பில்லை. மேக்ஸ்வெல் மற்றும் டுப்ளெசிஸ் ஆகிய இருவரில் ஒருவர் தான் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையே, விராட்கோலியையே மீண்டும் கேப்டன்சியை ஏற்குமாறு ஆர்சிபி அணி நிர்வாகம் பேசியதாகவும் தகவல் வெளியாகியது. ஆனால் மேக்ஸ்வெல் கேப்டனாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பே அதிகமுள்ளது. கேப்டன்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்ட விராட் கோலி, ஆர்சிபி அணியின் கேப்டனாக மீண்டும் செயல்பட வாய்ப்பே இல்லை என்று ஆர்சிபி முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி கருத்து கூறியிருந்தார்.
விராட் கோலியின் ராஜினாமாவை ஏற்கவில்லை:
ஆர்சிபி அணி இந்த வார இறுதியில் புதிய கேப்டனை நியமிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், விராட் கோலியின் கேப்டன்சி ராஜினாமாவை ஆர்சிபி அணி நிர்வாகம் இதுவரை ஏற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. எனவே விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தாலும், அவரது ராஜினாமாவை ஆர்சிபி அணி நிர்வாகம் ஏற்கவில்லை என்ற தகவல், அவரே மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதை தெரிவிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஒருவேளை அது நடந்தால், அதைவிட நற்செய்தி, கோலி மற்றும் ஆர்சிபி ரசிகர்களுக்கு இருக்கமுடியாது.