என் மேல ரொம்ப நம்பிக்கை வச்சு என்னை 5ம் வரிசையில் இறக்கிவிட்டார்! கேப்டன் ரோஹித்துக்கு மனதார நன்றி கூறிய ஜடேஜா

By karthikeyan VFirst Published Feb 27, 2022, 5:23 PM IST
Highlights

தன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து 5ம் பேட்டிங் ஆர்டரில் இறக்கிவிட்ட கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ரவீந்திர ஜடேஜா.
 

இலங்கைக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என தொடரை வென்றுவிட்டது. இந்த தொடரில் ஜடேஜா, சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைத்தது. 

குறிப்பாக 2வது டி20 போட்டியில் சாம்சன் மற்றும் ஜடேஜா ஆகிய இருவருமே அபாரமாக விளையாடினர். சாம்சன் 25 பந்தில் 39 ரன்களும், ஜடேஜா 18 பந்தில் 45 ரன்களும் அடித்தனர். ஜடேஜாவின் பேட்டிங் மிகச்சிறப்பாக இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக தனது பேட்டிங்கை வெகுவாக மெருகேற்றிய ஜடேஜா, இப்போது அபாரமாக பேட்டிங் ஆடிவருகிறார்.

அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து கேப்டன் ரோஹித் சர்மா, இலங்கைக்கு எதிரான 2 டி20 போட்டிகளிலும் ஜடேஜாவை 5ம் வரிசையில் இறக்கிவிட்டார். ரோஹித்தின் நம்பிக்கையை வீணடிக்காமல், அபாரமாக விளையாடி தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டார் ஜடேஜா.

2வது டி20 போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் பேசிய ஜடேஜா, 5ம் வரிசையில் பேட்டிங் ஆடுவதை நான் என்ஜாய் செய்தேன். எனக்கான நேரத்தை எடுத்துக்கொண்டு சூழலுக்கு ஏற்ப ஆடி, எனது இன்னிங்ஸில் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்க முடிந்தது. ரோஹித் சர்மா என் மீது வைத்த நம்பிக்கைக்கு மிக்க நன்றி. அவர் என் மீது நம்பிக்கை வைத்து 5ம் வரிசையில் இறக்கிவிட்டதால்தான், எனது அணிக்காக என்னால் ஸ்கோர் செய்யமுடிந்தது. சூழலுக்கு ஏற்ப ஆடி, என்னால் முடிந்தவரை என் அணியின் வெற்றிக்காக கண்டிப்பாக எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்றார் ஜடேஜா.
 

click me!