IPL 2021 ஜெய்ஸ்வால், மஹிபால் லாம்ரோர் அதிரடி பேட்டிங்! பஞ்சாப் கிங்ஸுக்கு கடின இலக்கை நிர்ணயித்த ராஜஸ்தான் அணி

By karthikeyan VFirst Published Sep 21, 2021, 9:46 PM IST
Highlights

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், எவின் லூயிஸ் மற்றும் மஹிபால் லாம்ரோர் ஆகிய மூவரின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 185 ரன்களை குவித்த ராஜஸ்தான் அணி, 186 ரன்கள் என்ற கடின இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸும் ராஜஸ்தான் ராயல்ஸும் மோதுகின்றன. துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் எவின் லூயிஸும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 5.3 ஓவரில் 54 ரன்களை சேர்த்து கொடுத்தனர். லூயிஸ் 21 பந்தில் 36 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

அதிரடியாக ஆடி அரைசதத்தை நெருங்கிய ஜெய்ஸ்வால் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் சாம்சன் மற்றுமொருமுறை ஏமாற்றமளித்தார். வெறும் 4 ரன்கள் மட்டுமே அடித்து அவர் ஆட்டமிழந்தார். லிவிங்ஸ்டோன் 17 பந்தில் 25 ரன்கள் அடிக்க, அதே 17 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 43 ரன்களை குவித்தார் மஹிபால் லாம்ரோர். அவரது அதிரடியால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

அவரது விக்கெட்டுக்கு பிறகு, ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, கிறிஸ் மோரிஸ் ஆகிய அனைவருமே ஒற்றை இலக்கத்தில் அடுத்தடுத்து வெளியேற, 20 ஓவரில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ராஜஸ்தான் அணி. 186 ரன்கள் என்ற கடின இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது. இது ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு போதுமான ஸ்கோரே.
 

click me!