
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் தங்கள் வழக்கமான ஜெர்ஸியை ஒதுக்கி வைத்துவிட்டு முழுமையான பிங்க் நிற ஜெர்ஸி அணிந்து விளையாடுகின்றனர்.
நடப்பு ஐபிஎல் சீசனில் வித்தியாசமான ஜெர்ஸியை அணிந்த இரண்டாவது அணி ராஜஸ்தான் ராயல்ஸ். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர்கள் ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் "Go Green" பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பச்சை நிற ஜெர்ஸிகளை அணிந்தனர். மரங்களை நடுவதன் அவசியம் மற்றும் புவி வெப்பமயமாதலின் விளைவைக் குறைப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.
அதனை அடுத்து இரண்டாவது முறையாக ராஜஸ்தான் ராயல்ஸ் முழுவதும் பிங்க் நிறத்தில் ஜெர்ஸி அணிந்துள்ளது. கடந்த ஆண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக இதே மைதானத்தில் இந்த வித்தியாசமான ஜெர்ஸியை அணிந்திருந்தனர்.
ராஜஸ்தானில் கிராமப்புறப் பெண்களை மேம்படுத்துவதற்கான ‘பிங்க் பிராமிஸ்’ முயற்சியின் ஒரு பகுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் பிங்க் ஜெர்ஸிகளை அணிந்துள்ளது. கடந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று, ராயல் ராஜஸ்தான் அறக்கட்டளை (RRF) இந்தப் பிரச்சாரத்தைத் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியிலும் பிங்க் ஜெர்சி அணிந்து விளையாடுகிறார்கள். இந்தப் போட்டியில் விற்கப்படும் ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்தும் ரூ.100 ராஜஸ்தான் கிராமப்புற பெண்கள் மேம்பாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்படும்.
டாஸின் போது, ராஜஸ்தானைச் சேர்ந்த பிங்கி தேவி, RR மற்றும் MI அணி கேப்டன்கள் ரியான் பராக் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு சூரிய சக்தியில் இயங்கும் நினைவுப் பொருட்களை வழங்கினார்.
ராஜஸ்தான் ராயல்ஸின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சியின் ஒரு பகுதியாக, போட்டியில் இரு அணிகளும் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸருக்கும், ராஜஸ்தானின் சாம்பர் பகுதியில் சூரிய சக்தியில் இயங்கும் ஆறு விளக்குகள் நன்கொடையாக வழங்கப்படும். RR அணியின் அறக்கட்டளை ராஜஸ்தானில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு பெண்கள் தலைமை தாங்குவதை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் மக்கள் சுத்தமான தண்ணீரைப் பெறவும், வாழ்வாதார வழிகளைக் கண்டறியவும் உதவுகிறது.