
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. மும்பை வான்கடேவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
ஜோஸ் பட்லர், வாண்டர் டசன், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் சென், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:
கேஎல் ராகுல் (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி, க்ருணல் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், கிருஷ்ணப்பா கௌதம், துஷ்மந்தா சமீரா, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான்.
முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். 29 பந்தில் 29 ரன்கள் அடித்து தேவ்தத் படிக்கல்லும் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 13 ரன்னிலும், வாண்டர் டசன் 4 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின்னர் ஷிம்ரான் ஹெட்மயர் அடித்து ஆட, அவருடன் இணைந்து நன்றாக ஆடிய அஷ்வின் 23 பந்தில் 2 சிக்ஸர்களுடன் 28 ரன்கள் அடித்து ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார்.
சிக்ஸர்களாக விளாசி அரைசதம் அடித்த ஷிம்ரான் ஹெட்மயர் 36 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று ராஜஸ்தான் அணி 165 ரன்களை அடிக்க உதவினார். 150 ரன்களை எட்டினாலே பெரிய விஷயம் என்று இருந்த ராஜஸ்தான் அணியை 165 ரன்களை எட்டவைத்தார் ஹெட்மயர்.
166 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான கேஎல் ராகுல், டிரெண்ட் போல்ட் வீசிய முதல் பந்திலேயே க்ளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்த பந்திலேயே கிருஷ்ணப்பா கௌதமும் ஆட்டமிழந்தார். 14 பந்தில் 8 ரன்கள் அடித்த ஜேசன் ஹோல்டர் பிரசித் கிருஷ்ணாவின் பவுலிங்கிலும், 25 ரன்கள் அடித்த தீபக் ஹூடா குல்தீப் சென்னின் பவுலிங்கிலும், ஆயுஷ் பதோனி 5 ரன்னில் யுஸ்வேந்திர சாஹலின் பவுலிங்கிலும் ஆட்டமிழக்க, லக்னோ அணி 12 ஓவரில் 74 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய குயிண்டன் டி காக் 39 ரன்கள் அடித்த நிலையில் சாஹலின் பந்தில் ஆட்டமிழக்க, அதே ஓவரிலேயே க்ருணல் பாண்டியாவும் ஆட்டமிழந்தார். சாஹலின் அடுத்த ஓவரில் துஷ்மந்தா சமீராவும் ஆட்டமிழந்தார். 19 வது ஓவரில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். கடைசி ஓவரில் லக்னோ அணிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை அருமையாக வீசிய குல்திப் சென் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்ததால் 3 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.