சபாஷ் ரெய்னா.. ராகுல் டிராவிட்டிடமிருந்து இப்படியொரு பாராட்டை பெறுவது மிகப்பெரிய பெருமை

By karthikeyan VFirst Published Aug 19, 2020, 3:58 PM IST
Highlights

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ரெய்னா ஓய்வு அறிவித்த நிலையில், இந்திய அணிக்காக சவாலான காரியங்கள் அனைத்தையும் செய்தவர் ரெய்னா என அவருக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, கடந்த 15ம் தேதி சுதந்திர தினத்தன்று, தோனியை தொடர்ந்து ஓய்வு அறிவித்தார். 33 வயதே ஆன ரெய்னாவின் திடீர் ஓய்வு அறிவிப்பு அனைவருக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது. 

2005ம் ஆண்டு ராகுல் டிராவிட்டின் கேப்டன்சியில் அறிமுகமான சுரேஷ் ரெய்னா, அதன்பின்னர் தோனியின் கேப்டன்சியில் அவரது ஆஸ்தான வீரராகவும் நெருங்கிய நண்பராகவும் இந்திய அணியின் நட்சத்திர வீரராகவும் ஜொலித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரெய்னா சோபிக்காததால், டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிக்கவில்லை என்றாலும், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அபாரமாக ஆடி இந்திய அணியின் மேட்ச் வின்னராக திகழ்ந்தார். 

சுரேஷ் ரெய்னா, இந்திய அணிக்காக 226 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5615 ரன்களையும் 78 டி20 போட்டிகளில் ஆடி 1605 ரன்களையும் விளாசியுள்ளார். வெறும் 18 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். ரெய்னா நல்ல பேட்ஸ்மேன் மட்டுமல்லாது, மிகச்சிறந்த ஃபீல்டரும் கூட. ஆல்டைம் பெஸ்ட் ஃபீல்டரும், ஃபீல்டிங்கின் அடையாளமாக திகழ்பவரான ஜாண்டி ரோட்ஸுக்கே மிகவும் பிடித்த ஃபீல்டர் ரெய்னா என்பது குறிப்பிடத்தக்கது. 

யுவராஜ் சிங், கைஃப் ஆகியோர் செட் செய்திருந்த இந்திய அணியின் ஃபீல்டிங் தரத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியவர் ரெய்னா. 2011 ஒருநாள் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்காற்றியவர். அந்த உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில், ரெய்னாவின் பொறுப்பான பேட்டிங்கால் தான் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கே சென்றது. 

ரெய்னா இந்திய அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்துவந்த நிலையில், 2015-2016 காலக்கட்டத்தில் ஓரங்கட்டப்பட்ட ரெய்னா, அதன்பின்னர் இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க முடியவில்லை. 2018ம் ஆண்டு மீண்டும் இங்கிலாந்து தொடரில் ஆடிய ரெய்னா, அதில் சரியாக ஆடாததால் மீண்டும் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக அவருக்கு மீண்டும் அணியில் இடம் கிடைக்கவில்லை. இனிமேல் தனக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து ரெய்னா ஓய்வு அறிவித்தார். 

இந்நிலையில், ரெய்னா குறித்து அவரது அறிமுக போட்டியின் கேப்டனும், இந்திய கிரிக்கெட்டின் பெருஞ்சுவரும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவருமான ராகுல் டிராவிட் பேசியுள்ளார். 

ரெய்னா குறித்து பேசிய ராகுல் டிராவிட், சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்காக அவரது கெரியர் முழுவதுமே கடினமான விஷயங்களை முன்னின்று செய்தார். ரெய்னா அவரது கெரியரில் பெரும்பாலும் பின்வரிசையிலேயே பேட்டிங் ஆடினார். ஃபீல்டிங் செய்ய கடினமான இடங்களில் ஃபீல்டிங் செய்வார். நெருக்கடியான நேரங்களில் பவுலிங்கும் செய்துள்ளார். அணிக்காக அனைத்துவிதத்திலும் பங்களிப்பு செய்துள்ளார். ரெய்னா சிறந்த, அணிக்கான வீரர். அணிக்காக அவரது முழு எனர்ஜி மற்றும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர். மிகத்திறமையான பேட்ஸ்மேன்.

ரெய்னா மட்டும் முன்வரிசையில் பேட்டிங் ஆடியிருந்தால், இன்னும் நிறைய ரன்களை குவித்திருப்பார். ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியில் அவர் செய்துள்ள ஸ்கோரே அதற்கு சான்று. ஐபிஎல்லில் 3ம் வரிசையில் இறங்கி அசத்தியுள்ளார். ஐபிஎல்லின் அருமையான வீரர் ரெய்னா என்று ராகுல் டிராவிட் புகழாரம் சூட்டியுள்ளார். ஐபிஎல்லில் 5368 ரன்களை குவித்துள்ள ரெய்னா தான், ஐபிஎல்லில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தனது கெரியரில் ஒரு இன்னிங்ஸை கூட சுயநலமாக ஆடிராத ராகுல் டிராவிட்டின் வாயால், சிறந்த டீம் பிளேயர் என்ற பாராட்டை ரெய்னா பெற்றிருப்பது மிகப்பெரிய பெருமை. ரெய்னாவும் தனது கெரியரில் சுயநலமாக ஆடியதில்லை. தனது சக வீரர்களின் சதங்களையும் சாதனைகளையும் ஆழ்மனதிலிருந்து மகிழ்ந்து கொண்டாடுவது, அணியின் நலனையும் போட்டியின் போக்கையும் மட்டுமே கருத்தில் கொண்டு அணியின் வெற்றிக்காக மட்டுமே ஆடுவது, சக வீரர்களுடன் போட்டி பொறாமையை கடைபிடிக்காதது என ஒரு பக்கா டீம் பிளேயராக இருந்து, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ரெய்னா. சில வீரர்களை மட்டும்தான் அனைவருக்கும் பிடிக்கும். அப்படியானவர்களில் ஒருவர் ரெய்னா.
 

click me!