அவரு சொதப்பிகிட்டே இருப்பாராம்.. எல்லாரும் பார்த்துகிட்டே இருக்கணுமாம்.. பேசாம தாதா சொன்ன மாதிரி செஞ்சுட்டு போங்கப்பா

By karthikeyan VFirst Published Sep 2, 2019, 11:36 AM IST
Highlights

நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சரியாக ஆடவில்லை. முதல் இன்னிங்ஸில் வெறும் 13 ரன்களில் ஆட்டமிழந்த அவர், இரண்டாவது இன்னிங்ஸில் 63 பந்துகள் பேட்டிங் ஆடி வெறும் 6 ரன்கள் மட்டுமே வெளியேறினார். இதைவிட ஒரு மோசமான இன்னிங்ஸை ஆடவே முடியாது. 
 

இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரரான கேஎல் ராகுல் தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பிவருகிறார். 

நல்ல பேட்டிங் டெக்னிக்கை கொண்ட வீரர் என்று பல முன்னாள் ஜாம்பவான்களாலும் ராகுல் புகழப்படுவது கேட்க வேண்டுமானால் நன்றாக இருக்கிறது. ஆனால் அவரால் அணிக்கு எந்தவித பயனும் இல்லை என்று நினைக்கும் அளவிற்குத்தான் அவரது ஆட்டம் இருக்கிறது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலுமே அவருக்கு நல்ல ஸ்டார்ட் கிடைத்தது. ஆனால் இரண்டையுமே அவர் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. முதல் இன்னிங்ஸில் 44 ரன்களிலும் இரண்டாவது இன்னிங்ஸில் 38 ரன்களிலும் ஆட்டமிழந்தார். 

நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சரியாக ஆடவில்லை. முதல் இன்னிங்ஸில் வெறும் 13 ரன்களில் ஆட்டமிழந்த அவர், இரண்டாவது இன்னிங்ஸில் 63 பந்துகள் பேட்டிங் ஆடி வெறும் 6 ரன்கள் மட்டுமே வெளியேறினார். இதைவிட ஒரு மோசமான இன்னிங்ஸை ஆடவே முடியாது. 

299 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் இப்படியா ஆடுவது..? அணி இக்கட்டான நிலையில் இருக்கும்போது ஆட வேண்டிய இன்னிங்ஸை(63 பந்துகளில் 6 ரன்கள்) இந்திய அணி வலுவான நிலையில் இருக்கும்போது ஆடியிருக்கிறார். இது அவரது இயலாமையைத்தான் காட்டுகிறதே தவிர வேறொன்றுமில்லை. இப்படி ஒரு மந்தமான இன்னிங்ஸை ஆட வேண்டிய அவசியமே இல்லை. எனவே அவரால் ரன் அடிக்க முடியவில்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது. 

ராகுல் அவர் மீது அணி நிர்வாகம் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்துகொள்ளவேயில்லை. அவர் தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பிவரும் நிலையிலும், அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. கேப்டன் கோலிக்கு நெருக்கமானவர் என்பதால்தான் அவருக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது என்பதை இதிலிருந்தே தெரிகிறது. ஏனெனில் தொடர்ச்சியாக சொதப்பும் மற்ற வீரர்களுக்கு இதுபோன்ற தொடர் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. 

ராகுலை விட ரோஹித் சர்மா ஒன்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமாக ஆடிவிடவில்லை. ஆனாலும் டீம் காம்பினேஷன் என்ற காரணத்தை சொல்லி ரோஹித் ஓரங்கட்டப்படுகிறார். அதேவேளையில் சரியாக ஆடாத ராகுலுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித்தை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக கருதுவதால் தான், ரஹானே, விஹாரி ஆகியோர் அணியில் இருப்பதால் ரோஹித்துக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. 

ரோஹித்தை டெஸ்ட் போட்டியிலும் தொடக்க வீரராக களமிறக்கலாம் என்று முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து தெரிவித்திருந்தார். எனவே தொடர்ச்சியாக சொதப்பிவரும் ராகுலை நீக்கிவிட்டு ரோஹித்தை தொடக்க வீரராக இறக்கித்தான் பார்க்கலாமே..? பரிசோதனை செய்வதில் ஒன்றும் தவறுமில்லை, குறைந்துவிட போவதுமில்லை. கங்குலி கேப்டனாக இருந்த காலத்தில் இப்படித்தான் சேவாக்கை தொடக்க வீரராக களமிறக்கிவிட்டார். அவர் ஆல்டைம் இந்திய டெஸ்ட் அணியின் சிறந்த தொடக்க வீரர் என்ற லெவலுக்கு உயர்ந்த இடத்தை பிடித்துவிட்டார். இதுபோன்ற சோதனை முயற்சிகளை செய்துபார்த்து, வீரர்களுக்கு அரிய வாய்ப்பை வழங்கி, அவர்களுக்கான இடத்தை பிடிக்க வைத்ததோடு, அவர்களது சிறப்பான ஆட்டத்தை அணியின் நலனுக்கும் பயன்படுத்தி கொண்டவர் கங்குலி. எனவே கங்குலியின் கருத்துக்கு கேப்டன் கோலியும், அணி நிர்வாகமும் செவிமடுத்து பார்க்கலாம். 
 

click me!