SA A vs IND A அம்பயர் அவுட் கொடுக்காத ஆத்திரத்தில் கண்ணாடியை கழட்டிஎறிந்த ராகுல் சாஹர்! அம்பயருடன் வாக்குவாதம்

By karthikeyan VFirst Published Nov 26, 2021, 3:30 PM IST
Highlights

தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி ஆடிவரும் டெஸ்ட் போட்டியில் ராகுல் சாஹர் கோபத்தில் கண்ணாடியை கழட்டி எறிந்து, அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

பிரியங்க் பன்சால் தலைமையிலான இந்தியா ஏ அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 நாட்கள் ஆடும் டெஸ்ட் தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா ஏ அணியின் தொடக்க வீரர் எர்வீ டக் அவுட்டானார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான பீட்டர் மலான் அபாரமாக ஆடி  சதமடித்தார். 163 ரன்களை குவித்தார் பீட்டர் மலான். டோனி டி ஜார்ஜியும் சிறப்பாக ஆடி சதமடித்தார். ஜார்ஜி 117 ரன்களை குவித்தார். அதன்பின்னரும் பின்வரிசையில்  ஜே ஸ்மித் 52 ரன்களும்,  கேஷில் 72 ரன்களும், ஜார்ஜ் லிண்டே 51 ரன்களும் அடித்தனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா ஏ அணி 509 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இந்தியா ஏ அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் ப்ரியன்க் பன்சால் ஆகிய இருவருமே சிறப்பாக ஆடினர். அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா 45 பந்தில் 48 ரன்கள் அடித்து அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ப்ரியன்க் பன்சாலுடன் ஜோடி சேர்ந்த அபிமன்யூ ஈஸ்வரன், அவருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சிறப்பாக விளையாடிய கேப்டன் பிரியன்க் பன்சால் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்து 4 ரன்னில் சதத்தை தவறவிட்டார். ஹனுமா விஹாரி 25 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் அபிமன்யூ ஈஸ்வரன் மிக அருமையாக பேட்டிங் ஆடி சதமடித்தார். ஆனால் அதன்பின்னர் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல், சதமடித்த மாத்திரத்தில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

3ம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் அடித்துள்ளது. பாபா அபரஜித்தும், உபேந்திரா யாதவும் களத்தில் இருந்த நிலையில், 4ம் நாளான இன்றைய ஆட்டம் மழையால் தாமதமாகிறது.

இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா ஏ அணியின் முதல் இன்னிங்ஸில் இந்திய பவுலர் ராகுல் சாஹர் 28.3 ஓவர்கள் வீசி அதிகபட்சமாக 125 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார். அதிக ரன்களை விட்டுக்கொடுத்த விரக்தியில் இருந்த ராகுல் சாஹர், தென்னாப்பிரிக்க இன்னிங்ஸின் 128வது ஓவரில் எல்பிடபிள்யூ-விற்கு அப்பீல் செய்தார். ஆனால் அம்பயர் அவுட் கொடுக்காத ஆத்திரத்தில், கண்ணில் அணிந்திருந்த கூலிங் க்ளாஸை கழட்டி எறிந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

ராகுல் சாஹரின் செயலால் அதிருப்தியடைந்த அம்பயர், அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, அது அவுட்டுதான் என்கிற ரீதியில் அவரிடம் வாக்குவாதமும் செய்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

Rahul Chahar might get pulled up here, showing absolute dissent to the umpires call.

A double appeal and throwing his equipment.

Footage credit - pic.twitter.com/TpXFqjB94y

— Fantasy Cricket Pro (@FantasycricPro)
click me!