
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸும் குஜராத் டைட்டன்ஸும் ஆடிவருகின்றன. மும்பை ப்ரபோர்ன் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. விஜய் சங்கர் மற்றும் வருண் ஆரோன் ஆகிய இருவரும் காயம் காரணமாக இந்த போட்டியில் ஆடவில்லை. அவர்களுக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் மற்றும் தர்ஷன் நால்கண்டே ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டனர்.
குஜராத் டைட்டன்ஸ் அணி:
மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, அபினவ் மனோகர்/குர்கீரத் சிங் மன், குகீரத் சிங், ரஷீத் கான், லாக்கி ஃபெர்குசன், முகமது ஷமி, தர்ஷன் நால்கண்டே.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல் 3 போட்டிகளில் ஆடாத ஜானி பேர்ஸ்டோ இந்த போட்டியில் ஆடுகிறார். அதனால் பானுகா ராஜபக்சா நீக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி:
மயன்க் அகர்வால்(கேப்டன்), ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் ஷர்மா, ஷாருக்கான், ஒடீன் ஸ்மித், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், வைபவ் அரோரா, அர்ஷ்தீப் சிங்.
முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான மயன்க் அகர்வால் இந்த போட்டியிலும் சொதப்பலாக பேட்டிங் ஆடி 5 ரன்னில் ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய ஜானி பேர்ஸ்டோ 8 ரன்னில் ஆட்டமிழந்தார். தவானுடன் ஜோடி சேர்ந்த லியாம் லிவிங்ஸ்டோன் களத்திற்கு வந்தது முதலே அடித்து ஆடினார். 16 ரன்னில் லிவிங்ஸ்டோனின் கடினமான கேட்ச்சை ஹர்திக் பாண்டியா பிடித்தபோது பவுண்டரி லைனை மிதித்துவிட்டதால் அதற்கு சிக்ஸர் ஆனது.
அதன்பின்னர் அடித்து ஆடி 21 பந்தில் அரைசதம் அடித்தார் லிவிங்ஸ்டோன். தவான் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ஜித்தேஷ் ஷர்மா 11 பந்தில் 2 சிக்ஸர்களுடன் 23 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, ஒடீன் ஸ்மித் டக் அவுட்டானார். அதிரடியாக ஆடிய லிவிங்ஸ்டோன் 27 பந்தில் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஷாருக்கான் 15 ரன்கள் மட்டுமே அடித்து ரஷீத் கானின் சுழலில் வீழ்ந்தார். கடைசி விக்கெட்டுக்கு ராகுல் சாஹரும் அர்ஷ்தீப் சிங்கும் இணைந்து 27 ரன்களை சேர்த்தனர். ராகுல் சாஹர் 22 ரன்களும், அர்ஷ்தீப் சிங் 10 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 189 ரன்களை குவித்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 190 ரன்கள் என்ற கடின இலக்கை குஜராத் டைட்டன்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.