இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் பிரித்வி ஷா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவருமே அரைசதத்தை தவறவிட்டனர்.
இலங்கைக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை வென்றுவிட்ட இந்திய அணி, இன்று நடந்துவரும் கடைசி ஒருநாள் போட்டியிலும் வென்று இலங்கையை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.
தொடரை ஏற்கனவே வென்றுவிட்டதால், முதல் 2 போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், பேட்ஸ்மேன் நிதிஷ் ராணா, ஸ்பின்னர் கிருஷ்ணப்பா கௌதம், ஃபாஸ்ட் பவுலர் சேத்தன் சக்காரியா ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளனர்.
இந்திய அணி:
ஷிகர் தவான்(கேப்டன்), பிரித்வி ஷா, சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், நிதிஷ் ராணா, ஹர்திக் பாண்டியா, கிருஷ்ணப்பா கௌதம், ராகுல் சாஹர், நவ்தீப் சைனி, சேத்தன் சக்காரியா.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஷிகர் தவான் 13 ரன்னில் சமீராவின் பந்தில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் 3வது ஓவரிலேயே ஆட்டமிழந்ததையடுத்து, 3வது ஓவரிலேயே களத்திற்கு வந்தார் அறிமுக வீரர் சஞ்சு சாம்சன்.
அதனால் பெரிய இன்னிங்ஸ் ஆடுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. அதற்கேற்ப சஞ்சு சாம்சன் நன்றாகத்தான் ஆடினார். ஆனால் அரைசதத்தை நெருங்கிய அவர், அதை 4 ரன்னில் தவறவிட்டார். 2வது விக்கெட்டுக்கு பிரித்வி ஷாவும் சஞ்சு சாம்சனும் இணைந்து 74 ரன்கள் சேர்த்தனர். பிரித்வி ஷா 49 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட, அவரை தொடர்ந்து சஞ்சு சாம்சனும் 46 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார்.
சஞ்சு சாம்சன் அறிமுக இன்னிங்ஸில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இதையடுத்து, சூர்யகுமார் யாதவும் மனீஷ் பாண்டேவும் இணைந்து ஆடிவருகின்றனர்.