#ENGvsIND இந்தியா எவ்வளவு கடினான இலக்கு நிர்ணயித்தாலும் அடிச்சுடுவோம்..! இங்கி., கோச் காலிங்வுட் நம்பிக்கை

By karthikeyan VFirst Published Sep 5, 2021, 2:49 PM IST
Highlights

4வது டெஸ்ட்டில் இந்திய அணி  எவ்வளவு கடினமான இலக்கை நிர்ணயித்தாலும் அதை அடித்துவிடுவோம் என்று மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார் இங்கிலாந்து அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் பால் காலிங்வுட்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களுக்கு சுருண்டது. ஷர்துல் தாகூர்(57) மற்றும் விராட் கோலியின்(50) அரைசதத்தால் தான் அந்த ஸ்கோராவது கிடைத்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் அடித்தது. 

99 ரன்கள் பின் தங்கிய 2வது இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி சிறப்பாக பேட்டிங் ஆடிவருகிறது. தொடக்க வீரர்கள் ரோஹித்தும் ராகுலும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 83 ரன்களை சேர்த்தனர். ராகுல் 46 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஆனால் ரோஹித் சர்மா இந்த முறை கிடைத்த ஸ்டார்ட்டை வீணடிக்காமல் பெரிய இன்னிங்ஸை ஆடி சதமடித்தார். 94 ரன்களில் இருந்தபோது சிக்ஸர் அடித்து சதத்தை எட்டினார் ரோஹித். இந்தியாவிற்கு தனது முதல் சதத்தை ரோஹித் பதிவு செய்ய, புஜாரா அரைசதம் அடித்தார். இருவரும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 153 ரன்களை குவித்தனர். 

புதிய பந்தை எடுத்ததும் புதிய பந்தில் ராபின்சன் வீசிய 81வது ஓவரின் முதல் பந்தில் ரோஹித் சர்மா 127 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதே ஓவரின் கடைசி பந்தில் 61 ரன்களுக்கு புஜாராவையும் வீழ்த்தினார் ராபின்சன். ஒரே ஓவரில் இந்திய அணியின் செட்டில் ஆன பேட்ஸ்மேன்கள் ரோஹித், புஜாரா ஆகிய இருவரும் ஆட்டமிழக்க, கோலியும் ஜடேஜாவும் இணைந்து ஆடிவரும் நிலையில், 3ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் அடித்துள்ளது இந்திய அணி.

171 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணிக்கு, கையில் இன்னும் 7 விக்கெட்டுகள் உள்ளன. கோலியும் நன்றாக ஆடிவருகிறார். எனவே இந்திய அணி சுமார் 300 ரன்கள் அல்லது அதற்கும் அதிகமாக இலக்கை நிர்ணயிக்கும் வாய்ப்புள்ளது.

ஆனால் ,கண்டிஷன் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால், இந்திய அணி என்ன இலக்கு நிர்ணயித்தாலும், அதை இங்கிலாந்து அடித்துவிடும் என்று இங்கிலாந்து ஃபீல்டிங் பயிற்சியாளர் பால் காலிங்வுட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பால் காலிங்வுட், கண்டிஷன் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால், இந்திய அணி எவ்வளவு கடினமான இலக்கு நிர்ணயித்தாலும் இங்கிலாந்து அதைக்கண்டு அச்சப்படாது. 4ம் நாள் ஆட்டத்தில் பந்து நகர்ந்தால், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை  சரித்து இந்திய அணியை அழுத்தத்திற்கு ஆளாக்குவோம் என்று பால் காலிங்வுட் தெரிவித்துள்ளார்.
 

click me!