முடிவுக்கு வந்த மூத்த வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை..? சொல்லாமல் சொல்லும் பாகிஸ்தான் அணி

By karthikeyan VFirst Published Jun 29, 2019, 5:07 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பின்னர் பாகிஸ்தான் அணியில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்பின்னர் தான் அந்த அணி வெற்றி பெறவே தொடங்கியது. 

உலக கோப்பை தொடரை படுமோசமாக தொடங்கிய பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பின்னர் மீண்டெழுந்து அரையிறுதி வாய்ப்பை வலுவாக தக்கவைத்துள்ளது. 

உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸிடம் மரண அடி வாங்கியது. அதன்பின்னர் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இலங்கைக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிராக  தோல்வியை தழுவியது. இந்தியாவுக்கு எதிரான தோல்வியை அடுத்து பாகிஸ்தான் அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. 

முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் அள்ளி தூற்றினர். அதன்பின்னர் வெகுண்டெழுந்த பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி வென்றது. இந்த வெற்றிகளை அடுத்து பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ் சொஹைலும் ஷாஹீன் அஃப்ரிடியும் அபாரமாக ஆடிவருவது அந்த அணிக்கு கூடுதல் பலம். இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பின்னர் பாகிஸ்தான் அணியில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்பின்னர் தான் அந்த அணி வெற்றி பெறவே தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் ஹாரிஸ் சொஹைல் ஆடினார். அந்த போட்டியில் பாகிஸ்தான் மரண அடி வாங்கியது. அதனால் அடுத்த போட்டியில் சொஹைல் நீக்கப்பட்டு ஷோயப் மாலிக் சேர்க்கப்பட்டார். 

ஆனால் ஷோயப் மாலிக் ஒரு போட்டியில் கூட சரியாக ஆடவில்லை. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக டக் அவுட்டானார். இதையடுத்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டு ஹாரிஸ் சொஹைல் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக சிறப்பாக ஆடி பாகிஸ்தான் அணியை வெற்றி பெற செய்தார். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியிலும் ஹாரிஸ் சொஹைல் தான் ஆடிவருகிறார். 

அதனால் ஷோயப் மாலிக் அணியில் எடுக்கப்படவில்லை. இனிவரும் போட்டிகளில் அவர் எடுக்கப்படுவதற்கான வாய்ப்பும் இல்லை என்றே தெரிகிறது. கடந்த 20 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணிக்காக கிரிக்கெட் ஆடிவந்த மாலிக்கின் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிந்தேவிட்டது. இந்தியாவுக்கு எதிராக அவர் ஆடிய போட்டிதான் அவருக்கு கடைசி போட்டியாக இருக்கும் என்று முன்னாள் வீரர் முகமது யூசுஃப் கருத்து தெரிவித்திருந்தார். அதேமாதிரிதான் நடந்துள்ளது. 

கடந்த 2 போட்டிகளில் ஆடாத மாலிக், இனிமேல் எடுக்கப்பட வாய்ப்பில்லை. இந்த உலக கோப்பையில் இனிவரும் போட்டிகளில் மாலிக் அணியில் எடுக்கப்பட வாய்ப்பில்லை. ஆனால் உலக கோப்பைக்கு பின்னர் மாலிக் ஃபேர்வெல் போட்டியில் ஆடவைக்கப்பட வாய்ப்புள்ளது; வாய்ப்பு இல்லாமல் போவதற்கும் வாய்ப்புள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் இனி அவர் ஆடமாட்டார் என்றபோதிலும் இந்தியாவுக்கு எதிராக ஆடியதுதான்  அவரது கடைசி போட்டியா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 

click me!