உலக கோப்பையில் இதுவரை பண்ணாததை பண்ணோம்.. நியூசிலாந்தை தட்டி தூக்கிட்டோம்.. பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அதிரடி

By karthikeyan VFirst Published Jun 27, 2019, 12:30 PM IST
Highlights

உலக கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிகண்ட பாகிஸ்தான் அணி, அரையிறுதி வாய்ப்பை வலுவாக தக்கவைத்துள்ளது. 
 

உலக கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிகண்ட பாகிஸ்தான் அணி, அரையிறுதி வாய்ப்பை வலுவாக தக்கவைத்துள்ளது. 

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, ஜேம்ஸ் நீஷம் மற்றும் கோலின் டி கிராண்ட் ஹோம் ஆகிய இருவரின் பொறுப்பான பேட்டிங்கால் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 237 ரன்கள் அடித்தது. மிகச்சிறப்பாக ஆடிய நீஷம் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் அடித்திருந்தார். 

238 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக தொடங்கினர். எனினும் அவர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில், மூன்றாவது விக்கெட்டுக்கு பாபர் அசாமும் முகமது ஹஃபீஸும் சிறப்பாக ஆடினர். ஹஃபீஸ் 32 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் பாபர் அசாமும் ஹாரிஸ் சொஹைலும் பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடினர். 

இந்த ஜோடியை நியூசிலாந்து அணியால் பிரிக்க முடியவில்லை. இருவரும் இணைந்து அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்ற நேரத்தில், 68 ரன்கள் அடித்த சொஹைல் 49வது ஓவரில் ஆட்டமிழந்தார். ஆனால் சதமடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த பாபர் அசாம் அணியை வெற்றி பெற செய்தார்.  இதையடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் அரையிறுதி வாய்ப்பை வலுவாக தக்கவைத்துள்ளது. பாகிஸ்தான் அணி எஞ்சிய 2 போட்டிகளில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுடன் மோதுகிறது. எனவே அந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால், அதேநேரத்தில் இங்கிலாந்து அணி எஞ்சிய 2ல் ஒரு போட்டியில் தோற்றால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறிவிடும். படுமோசமான நிலையிலிருந்து அரையிறுதிக்கு முன்னேறுமளவிற்கு அபாரமாக ஆடியுள்ளது பாகிஸ்தான் அணி. 

இந்த உலக கோப்பையில் தோல்வியையே தழுவாத நியூசிலாந்து அணிக்கு முதல் தோல்வியை பாகிஸ்தான் அணி பரிசளித்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் பவுலிங் அபாரமாக இருந்தது. பேட்டிங்கிலும் பாகிஸ்தான் வீரர்கள் மாஸ் காட்டினர். பேட்டிங், பவுலிங்கில் எப்போதுமே பாகிஸ்தான் அணி நன்றாகவே செயல்படும். ஆனால் பொதுவாக படுமோசமாக ஃபீல்டிங் செய்யும் பாகிஸ்தான் வீரர்கள் நேற்றைய போட்டியில் அபாரமாக ஃபீல்டிங் செய்தனர். சிறப்பாக ஃபீல்டிங் செய்த பாகிஸ்தான் வீரர்கள், பவுண்டரிகளை மறைத்தனர். கடைசி நேரத்தில் டி கிராண்ட் ஹோமை ரன் அவுட் செய்தனர். விக்கெட் கீப்பரும் கேப்டனுமான சர்ஃபராஸ் ஒரு அபாரமான கேட்ச்சை பிடித்தார். 

வழக்கமாக ஃபீல்டிங்கில் சொதப்பும் பாகிஸ்தான் அணி, நேற்றைய போட்டியில் சிறப்பாக ஃபீல்டிங் செய்தனர். அதன்மூலம் எதிரணியின் ஸ்கோரையும் சற்று குறைத்தனர். இந்நிலையில், போட்டிக்கு பின்னர் பேசிய பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது, இந்த உலக கோப்பையில் இதுவரை நாங்கள் சரியாக ஃபீல்டிங் செய்யாமல் இருந்தோம். அதனால் கடுமையாக ஃபீல்டிங் பயிற்சி எடுத்தோம். அதன்விளைவாக இந்த போட்டியில் சிறப்பாக ஃபீல்டிங் செய்தோம். பாகிஸ்தான் அணி வெற்றி கட்டாயத்திற்கு தள்ளப்படும்போதெல்லாம் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பறிக்கும். அதுதான் இன்றைக்கும் நடந்தது என்று சர்ஃபராஸ் அகமது தெரிவித்தார். 
 

click me!