
இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின்பு, டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகிவிட்டார்.
தோனிக்கு பிறகு 2014ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சியை ஏற்ற விராட் கோலி, 68 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி, 40 வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். விராட் கோலி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. வெளிநாடுகளில் ஆதிக்கம் செலுத்தி ஆடி வெற்றிகளை குவித்தது. இந்திய அணிக்கு அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் விராட் கோலி.
விராட் கோலி டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து திடீரென விலகிய நிலையில், அடுத்த கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்பதுதான் பெரும் கேள்வியாக உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மா தான் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் காயத்தால் ஆடாத காரணத்தால் தான் ராகுல் துணை கேப்டனாக செயல்பட்டார்.
ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மாவே, டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் சர்மாவைத்தான் பிசிசிஐ கேப்டனாக நியமிக்கும். ஏனெனில் அவர் தான் கேப்டன்சியில் நல்ல அனுபவம் கொண்டவர். உடனடியாக கேப்டன்சியை ஏற்க தகுதியான வீரர்.
ஆனால் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு நீண்டகாலம் கேப்டனாக இருக்கக்கூடிய வீரரைத்தான் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் சில முன்னாள் வீரர்கள், ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய வீரர்களின் பெயர்களை பரிந்துரைக்கிறார்கள். ஆனால் அதுவெல்லாம் சரியாக வராது. ரோஹித்தைத்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் திடமாக கூறுகிறார்கள்.
புதிய கேப்டனை அடையாளம் காணும் பணியில் பிசிசிஐ மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தீவிரமாக செயல்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் குறித்து பேசியுள்ள இந்திய ஃபாஸ்ட் பவுலர் முகமது ஷமி, டெஸ்ட் போட்டிக்கான அணிக்கு வலுவான கேப்டன் தேவை. யார் புதிய கேப்டனாக இருந்தாலும் சரி.. புதிய கேப்டன் தலைமையில் இலங்கைக்கு எதிராக இந்தியாவில் டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளோம். நம் நாட்டில் ஆடுவது நமக்கு சாதமாக இருக்கும். டெஸ்ட் அணிக்கு வலுவான கேப்டன் தேவை. நாங்கள் பவுலிங் யூனிட்டாக இணைந்து செயல்பட வேண்டும். ரோஹித் சர்மா, ரஹானே ஆகியோரும் உள்ளனர். யார் புதிய கேப்டனாக பொறுப்பேற்றாலும் சரி.. ஆட்டத்தின் முடிவுகளே முக்கியம். வீரர்கள் தனிப்பட்ட முறையிலும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று முகமது ஷமி தெரிவித்தார்.