கேப்டனை மாத்திட்டு எனக்கு இன்னும் 2 வருஷம் கொடுங்க.. தலைசிறந்த அணியாக உருவாக்கி காட்டுறேன்.. பயிற்சியாளர் போட்ட போட்டில் அதிர்ந்துபோன கேப்டன்

By karthikeyan VFirst Published Aug 5, 2019, 5:37 PM IST
Highlights

தனது பயிற்சிக்காலத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டித்து கொடுத்தால் மட்டுமே பாகிஸ்தான் அணியை தலைசிறந்த அணியாக உருவாக்க முடியும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் பயிற்சியாளர் மிக்கி ஆர்துர் தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. பாகிஸ்தான் அணி லீக் சுற்றின் முடிவில் 11 புள்ளிகளை பெற்றும் நெட் ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு சென்றதால் பாகிஸ்தான் அணி வெளியேறியது. 

உலக கோப்பை தொடரின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவின் கேப்டன்சி மற்றும் ஃபிட்னெஸ் ஆகியவை கடும் விமர்சனத்துக்கும் கிண்டலுக்கும் ஆளானது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு எதிரான அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு மீண்டெழுந்து தொடர் வெற்றிகளை பெற்றபோதிலும் பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. 

பாகிஸ்தான் அணி தவறுகளையும் சிக்கல்களையும் கலைந்து மீண்டெழ வேண்டிய அவசியம் உள்ளது. உள்நாட்டு கிரிக்கெட்டை வலுப்படுத்தி நிறைய திறமையான வீரர்களை அடையாளம் கண்டு அணியில் சேர்த்து அணியை வலுவான அணியாக கட்டமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. 

பாகிஸ்தான் அணியை கட்டமைப்பதற்கு பிரதமர் இம்ரான் கானே நேரடியாக களத்தில் இறங்கப்போவதாக தெரிவித்திருந்தார். உள்நாட்டு கிரிக்கெட்டை வலுப்படுத்தி சிறந்த வீரர்களை அணியில் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். 

சர்ஃபராஸ் அகமதுவை கேப்டன்சியில் இருந்து நீக்குவது குறித்த பேச்சுகளும் உலாவருகின்றன. பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்துரின் பதவிக்காலம் வரும் 15ம் தேதியுடன் முடிவடைகிறது. மிக்கி ஆர்துரின் பயிற்சிக்காலத்தில் பாகிஸ்தான் அணி, ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. இவரது பயிற்சிக்காலத்தின் கீழ்தான் 2017ல் பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றதோடு, டி20 கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தையும் பிடித்தது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் படுமோசமாக சொதப்பியது.

இந்நிலையில், தனது பயிற்சிக்காலத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டித்து கொடுத்தால் மட்டுமே பாகிஸ்தான் அணியை தலைசிறந்த அணியாக உருவாக்க முடியும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளிடம் மிக்கி ஆர்துர் தெரிவித்துள்ளார். மேலும் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவின் கேப்டன்சியில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி அவரை கேப்டன்சியிலிருந்து நீக்கிவிட்டு புதிய கேப்டனை நியமிக்க வேண்டும் எனவும் மிக்கி ஆர்துர் வலியுறுத்தியுள்ளார். 
 

click me!