மார்க் உட்டின் வேகத்தில் இங்கிலாந்திடம் மண்டியிட்டு சரணடைந்த தென்னாப்பிரிக்கா.. சொந்த மண்ணில் படுமோசமான சொதப்பல்

By karthikeyan VFirst Published Jan 26, 2020, 4:26 PM IST
Highlights

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 400 ரன்களை குவித்த நிலையில், தென்னாப்பிரிக்க அணியோ வெறும் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 
 

இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கு முன்பாக, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 

அதுவும் அந்த இரண்டு வெற்றிகளும் சாதாரண வெற்றிகள் இல்லை, மிகப்பெரிய வெற்றிகள். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 189 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, மூன்றாவது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அதைவிட பெரிய வெற்றியை பெற்று அசத்தியது. 

2 மற்றும் 3வது போட்டிகளில் படுமோசமாக பேட்டிங் ஆடி படுதோல்வியை சந்தித்த தென்னாப்பிரிக்க அணி, கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் படுமோசமாகவே பேட்டிங் ஆடியது. ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்துவரும் இந்த போட்டி மழையால் நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. முதல் நாள் ஆட்டத்தில் ஒரு செசனுக்கும் மேலாக மழையால் பாதிக்கப்பட்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டத்தின் இரண்டாவது செசனில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் சீரான இடைவெளியில் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். 

தொடக்க வீரர் பீட்டர் மாலன் 15 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த வாண்டெர் டசன் ரன்னே அடிக்காமல் ஆட்டமிழந்தார். வழக்கமாக பொறுப்புடனும் சிறப்பாகவும் ஆடும் தொடக்க வீரர் டீன் எல்கர் இந்த முறை 26 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். தன் கெரியரின் மோசமான ஃபார்மில் இருக்கும் கேப்டன் டுப்ளெசிஸ் 3 ரன்னில் நடையை கட்ட, டெம்பா பவுமா மற்றும் நோர்ட்ஜே ஆகியோர் தலா 6 ரன்களில் மார்க் உட்டின் பந்தில் ஆட்டமிழந்தனர். டி காக் மட்டும் ஒரு முனையில் நிலைத்து நின்று ஆடினார். 

இரண்டாம் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் அடித்திருந்தது. மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தை டி காக்கும் ஃபிளாண்டரும் தொடர்ந்தனர். ஃபிளாண்டர் களத்திற்கு வந்த சிறிது நேரத்திலேயே ஆட்டமிழந்தார். வெறும் 3 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 4 ரன்கள் மட்டுமே அடித்து ஃபிளாண்டர் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து டி காக்குடன் ஜோடி சேர்ந்த ப்ரிட்டோரியஸ் பொறுப்புடன், டி காக்கிற்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார். இருவரும் இணைந்து 8வது விக்கெட்டுக்கு 79 ரன்களை சேர்த்தனர். ப்ரிட்டோரியஸ் 37 ரன்களில் ஆட்டமிழக்க, சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த டி காக், 76 ரன்களில் 9வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இதையடுத்து கடைசி விக்கெட்டாக பேட்டர்சனும் 4 ரன்களில் ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபாரமாக பந்துவீசிய இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் மார்க் உட் 46 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

217 ரன்கள் முன்னிலை என்ற வலுவான நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடுகிறது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து அணி வலுவான முன்னிலையில் உள்ளதால், முடிந்தவரை விரைவில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்துவிட்டு, தென்னாப்பிரிக்காவிற்கு கடினமான இலக்கை நிர்ணயித்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடவிடும். இந்த போட்டியில் இனிமேல் தென்னாப்பிரிக்கா மீண்டெழுவது மிகக்கடினம். ஏனெனில் இங்கிலாந்தின் கை வெகுவாக ஓங்கியுள்ளது. சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்க அணி படுகேவலமாக ஆடிவருகிறது. இது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. 

click me!