
2017ம் ஆண்டிலிருந்து இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக இருந்துவந்தார் விராட் கோலி. 2017ம் ஆண்டு தோனி கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து அதிலிருந்து இந்திய வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டன்சியையும் ஏற்றார் கோலி. டெஸ்ட் அணியின் கேப்டன்சியை 2014ம் ஆண்டே ஏற்றார் கோலி.
4 ஆண்டுகளாக இந்திய அணியை சிறப்பாகவே வழிநடத்திவந்தார் விராட் கோலி. ஆனால் அவரது கேப்டன்சியில் இந்திய அணி ஒரு ஐசிசி டிராபியை கூட ஜெயிக்கவில்லை என்பதுதான் பெரும் விமர்சனமாக இருந்துவந்தது. ஆனாலும் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி அதிகமான வெற்றிகளை குவித்தது.
ஐசிசி டிராபியை ஜெயிக்கவில்லை என்பது காலப்போக்கில் அவருக்கே பெரும் அழுத்தமாக மாறியது. ஐபிஎல்லிலும் அவரது தலைமையில் ஆர்சிபி அணி கோப்பை ஜெயிக்கவில்லை. எல்லாம் சேர்ந்து பெரும் அழுத்தமாக மாற, அவரது பேட்டிங் ஃபார்மும் கடந்த 2 ஆண்டுகளாக பெரியளவில் இல்லை. அவர் சதமடித்தே 2 ஆண்டுகல் ஆகிவிட்டன.
இந்நிலையில், தனது பணிச்சுமையை குறைத்துக்கொண்டு பேட்டிங்கில் கவனம் செலுத்தும் விதமாக, டி20 உலக கோப்பையுடன் டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே அதிரடியாக அறிவித்தார். அவரது தலைமையில் டி20 கிரிக்கெட்டில் கடைசியாக ஆடிய டி20 உலக கோப்பை தொடரிலும் இந்திய அணி சரியாக செயல்படவில்லை. சூப்பர் 12 சுற்றுடனேயே வெளியேறியது.
இதையடுத்து டி20 அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். ரோஹித்தின் தலைமையில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்திய அணி. டி20 அணியின் கேப்டனாக ரோஹித் நியமிக்கப்பட்டபோதே, ஒருநாள் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளிவந்துவிட்டது. அந்தவகையில் கடந்த 8ம் தேதி ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி 95 ஒருநாள் போட்டிகளில் ஆடி 65 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்நிலையில், கோலி கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி விளக்கமளித்தார். அப்போது பேசிய கங்குலி, இதுகுறித்து பேசிய பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் என்று விராட் கோலியை பிசிசிஐ சார்பில் கேட்டுக்கொண்டோம். கேப்டனை மாற்றும் ஐடியாவே கிடையாது. ஆனால் விராட் டி20 கேப்டன்சியிலிருந்து விலகினார். டி20 அணியை ஒரு கேப்டனும், ஒருநாள் அணிக்கு ஒரு கேப்டனும் வழிநடத்துவதை தேர்வாளர்கள் விரும்பவில்லை. எனவே தான் ஒருநாள் அணியின் கேப்டன்சியையும் ரோஹித்திடமே கொடுத்தனர் என்று கங்குலி தெரிவித்தார்.
இந்நிலையில், விராட் கோலி நீக்கம் விவகாரத்தில் கோலி கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டது தவறு என்று கருத்து கூறியுள்ளார் முன்னாள் வீரர் மதன் லால்.
இதுகுறித்து பேசியுள்ள மதன் லால், அணி தேர்வாளர்களின் சிந்தனை என்னவென்று எனக்கு தெரியவில்லை. ஒரு கேப்டன் (கோலி) நல்ல ரிசல்ட் கொடுக்கிறார் என்றால், அவரை ஏன் நீக்க வேண்டும். அனைத்துவிதமான போட்டிகளிலும் கவனம் செலுத்திவரும் கோலி, டி20 கேப்டன்சியிலிருந்து விலகியதை புரிந்துகொள்ளமுடிகிறது.
ஆனால் வெற்றிகரமாக திகழும் ஒரு கேப்டனை நீக்க வேண்டிய அவசியம் என்ன? 2023 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை வரை கோலியே கேப்டனாக நீடித்திருக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து. ஒரு அணியை கட்டமைப்பது கடினம்; தகர்ப்பது எளிது. எந்த இடத்தில் குழப்பம் உருவானது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒவ்வொரு கேப்டனுக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கிறது. ரோஹித் - விராட் ஆகிய இருவருக்கும் வெவ்வேறு ஸ்டைல் இருக்கிறது. அவரவர் அவரவரது பாணியில் அணியை வழிநடத்துவார். சர்வதேச அளவில் எல்லா போட்டிகளிலும் எல்லா நேரத்திலும் சிறப்பாக செயல்பட்டுவிட முடியாது என்று மதன் லால் தெரிவித்தார்.