ஐபிஎல் 15வது சீசனுக்கான லக்னோ அணியின் உதவி பயிற்சியாளராக இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர் விஜய் தாஹியா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல்லில் இதுவரை 8 அணிகள் மட்டுமே ஆடிவந்த நிலையில், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள 15வது சீசனில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகள் ஆடவுள்ளன. லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக இணைகின்றன.
எனவே அடுத்த சீசனிலிருந்து ஐபிஎல்லில் 10 அணிகள் ஆடவுள்ளன. அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. லக்னோ அணியை ஆர்பி சஞ்சீவ் கோயங்கா குழுமம் ரூ.7,090 கோடிக்கு வாங்கியது. அகமதாபாத் அணியை சிவிசி கேபிடள் பார்ட்னர்ஸ் நிறுவனம் ரூ.5,625 கோடிக்கு வாங்கியது.
அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவிருப்பதால், ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்துக்கொண்டு (அதிகபட்சம் 4 வீரர்கள்) மற்ற வீரர்களை விடுவித்துள்ளன. ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்திற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மெகா ஏலம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, லக்னோ அணி பயிற்சியாளர் குழுவை அதிரடியாக நியமித்துவருகிறது. அகமதாபாத் அணி இன்னும் யாரையும் நியமிக்கவில்லை. ஆனால் லக்னோ அணி அதிவேகமாக செயல்பட்டுவருகிறது.
ஜிம்பாப்வே முன்னாள் கேப்டன் ஆண்டி ஃப்ளவரை தலைமை பயிற்சியாளராக நியமித்த லக்னோ அணி, ஆலோசகராக கௌதம் கம்பீரை நியமித்தது.
இந்நிலையில், இப்போது உதவி பயிற்சியாளராக இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர் விஜய் தாஹியா நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 2 டெஸ்ட் மற்றும் 19 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். கம்பீர் தலைமையில் கேகேஆர் அணி கோப்பையை வென்ற 2012 மற்றும் 2014 ஆகிய சீசன்களில் அந்த அணியின் உதவி பயிற்சியாளராக விஜய் தாஹியா தான் இருந்தார்.
கம்பீர், விஜய் தாஹியா என கேகேஆர் அணி கோப்பையை வென்றபோது அந்த அணியில் பங்காற்றியவர்களை தட்டி தூக்குகிறது லக்னோ அணி.