கோலி - ரஹானே சிறப்பான பேட்டிங்.. வலுவான நிலையில் இந்திய அணி

By karthikeyan VFirst Published Aug 25, 2019, 9:28 AM IST
Highlights

மூன்றாம் நாளான நேற்றைய ஆட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டரும் கம்மின்ஸும் தொடர்ந்தனர். கம்மின்ஸ் விக்கெட்டை மட்டும் இழந்துவிடாமல் ஆடிக்கொண்டிருக்க, ஹோல்டர் மட்டுமே ரன்கள் அடித்தார். 39 ரன்கள் அடித்த ஹோல்டரின் விக்கெட்டை வீழ்த்தினார் ஷமி. 44 பந்துகள் பேட்டிங் ஆடி ரன்னே அடிக்காத கம்மின்ஸை, 45வது பந்தில் வீழ்த்தினார் ஜடேஜா. 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் கடந்த 22ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் மயன்க் அகர்வால், புஜாரா, கோலி ஆகிய மூவரும் 25 ரன்களுக்கு உள்ளாகவே ஆட்டமிழந்துவிட்டனர். அதன்பின்னர் ரஹானேவும் ராகுலும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். 

ராகுல் 44 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த ரஹானே, 81 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். அதன்பிறகு ஜடேஜா மட்டுமே சிறப்பாக ஆடி 58 ரன்களை அடித்தார். ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் ஆகியோர் பெரிதாக ஆடவில்லை. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. ரோஸ்டன் சேஸ் தான் அதிகபட்சமாக 48 ரன்கள் அடித்தார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் அடித்திருந்தது. இஷாந்த் சர்மா அபாரமாக வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

மூன்றாம் நாளான நேற்றைய ஆட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டரும் கம்மின்ஸும் தொடர்ந்தனர். கம்மின்ஸ் விக்கெட்டை மட்டும் இழந்துவிடாமல் ஆடிக்கொண்டிருக்க, ஹோல்டர் மட்டுமே ரன்கள் அடித்தார். 39 ரன்கள் அடித்த ஹோல்டரின் விக்கெட்டை வீழ்த்தினார் ஷமி. 44 பந்துகள் பேட்டிங் ஆடி ரன்னே அடிக்காத கம்மின்ஸை, 45வது பந்தில் வீழ்த்தினார் ஜடேஜா. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

75 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் இந்த இன்னிங்ஸிலும் ஏமாற்றமளித்தார். மயன்க் 16 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ராகுலும் புஜாராவும் ஜோடி சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றனர். ஆனால் ராகுலை 38 ரன்களில் வீழ்த்திவிட்டார் சேஸ். புஜாராவும் 25 ரன்களில் கீமார் ரோச்சின் பந்தில் ஆட்டமிழக்க, இந்திய அணி 81 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. 

இதையடுத்து சீனியர் வீரர்களான கோலியும் ரஹானேவும் ஜோடி சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நல்ல ஃபார்மில் இருக்கும் அனுபவ வீரர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து தெளிவாக ஆடியதால், இந்த ஜோடியை வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. இருவருமே அரைசதம் கடந்து களத்தில் உள்ளனர். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் அடித்துள்ளது. கோலி 51 ரன்களுடனும் ரஹானே 53 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி,260 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 100-150 ரன்கள் அடித்தால் போதும். கடைசி இன்னிங்ஸில் 350-400 ரன்கள் என்பது கடினமான இலக்கு. எனவே இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 
 

click me!