தோல்வி எதிரொலி.. பயிற்சியாளர் அதிரடி நீக்கம்.. அடுத்த விக்கெட் கேப்டன் தான்

By karthikeyan VFirst Published Jul 14, 2019, 4:54 PM IST
Highlights

2018ல் நன்றாக ஆடிய கேகேஆர் அணி, 2019 சீசனில் சரியாக ஆடாததோடு அணியில் சில குழப்பங்கள் ஏற்பட்டன. 

ஐபிஎல்லில் 12 சீசன்கள் முடிந்துள்ளன. அடுத்த சீசன் ஐபிஎல்லின் 13வது சீசன். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு அடுத்து வெற்றிகரமான அணியாக திகழ்வது கேகேஆர் அணிதான். 

கேகேஆர் அணி கவுதம் கம்பீரின் கேப்டன்சியில் இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது. 2017ம் ஆண்டு வரை கம்பீர் கேகேஆர் அணிக்காக ஆடினார். அதன்பின்னர் அவர் விலகியதால், கடந்த இரண்டு சீசன்களாக தினேஷ் கார்த்திக் கேப்டனாக செயல்பட்டுவருகிறார். 

2018ல் நன்றாக ஆடிய கேகேஆர் அணி, 2019 சீசனில் சரியாக ஆடாததோடு அணியில் சில குழப்பங்கள் ஏற்பட்டன. கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரசல், அணியில் வெளிப்படையாக சில விஷயங்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசியது, அணியில் இருக்கும் குழப்பத்தை அம்பலப்படுத்தியது. கடந்த சீசனின் முதற்பாதியில் சிறப்பாக ஆடி தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்த கேகேஆர் அணி, இரண்டாம் பாதியில் படுமோசமாக சொதப்பியது. 

இந்நிலையில், கேகேஆர் அணியை அடுத்த சீசனுக்கு மேம்படுத்தும் நடவடிக்கைகளில் அந்த அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அதன் முதற்கட்ட நடவடிக்கையாக கடந்த 8 ஆண்டுகளாக கேகேஆர் அணியில் அங்கம் வகித்துவரும் ஜாக் காலிஸ் நீக்கப்பட்டுள்ளார். ஜாக் காலிஸ் கேகேஆர் அணியில் 2011 முதல் 2014ம் ஆண்டு வரை ஆடினார். அதன்பின்னர் ஆலோசகராக இருந்த காலிஸ், கடந்த சில சீசன்களாக தலைமை பயிற்சியாளராக இருந்துவந்தார். இந்நிலையில், அவரை தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கேகேஆர் அணி நிர்வாகம் அதிரடியாக நீக்கியுள்ளது. 

கேகேஆர் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்துவந்த சைமன் கேடிச்சும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அடுத்த விக்கெட் கண்டிப்பாக கேப்டன் தினேஷ் கார்த்திக்காகத்தான் இருக்கும். தினேஷ் கார்த்திக் நீக்கப்படும் அந்த தருணத்திற்காக காத்திருக்கலாம். 
 

click me!