விஜய் சங்கர் - ரிஷப் பண்ட்.. 2 பேருல யாரை எடுக்கணும்..? இந்திய அணிக்கு கெவின் பீட்டர்சனின் ஆலோசனை

By karthikeyan VFirst Published Jun 29, 2019, 5:13 PM IST
Highlights

உலக கோப்பைக்கு முன்னதாக இந்திய அணியின் நான்காம் வரிசை குறித்த பெரிய விவாதமே நடந்தது. பல பரிசோதனை முயற்சிகளுக்கு பிறகு ஒருவழியாக விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டார். ஆனால் பயிற்சி போட்டியில் நான்காம் வரிசையில் ராகுல் சிறப்பாக ஆடியதால் முதல் சில போட்டிகளில் ராகுல் தான் நான்காம் வரிசையில் ஆடினார். விஜய் சங்கருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. 
 

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது. எஞ்சிய ஒரு இடத்திற்கு இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

இந்த உலக கோப்பை தொடரில் இதுவரை தோற்காத அணியாக இந்திய அணி கெத்தாக வலம்வந்தாலும் இந்திய அணியில் சில குறைபாடுகள் உள்ளன. ஆனால் இந்திய அணியின் வெற்றி அவற்றை மறைத்துவிடுகிறது. இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்டிங்கும் பவுலிங்கும் சிறப்பாக உள்ளது. மிடில் ஆர்டரில் உள்ள சிக்கல் தொடர்ந்து நீடித்துவருகிறது. ஆனால் டாப் ஆர்டர் பேட்டிங் மற்றும் அபாரமான பவுலிங்கால் இந்திய அணி வெற்றி பெறுவதால் மிடில் ஆர்டர் பிரச்னை பெரிதாக தெரியவில்லை. 

உலக கோப்பைக்கு முன்னதாக இந்திய அணியின் நான்காம் வரிசை குறித்த பெரிய விவாதமே நடந்தது. பல பரிசோதனை முயற்சிகளுக்கு பிறகு ஒருவழியாக விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டார். ஆனால் பயிற்சி போட்டியில் நான்காம் வரிசையில் ராகுல் சிறப்பாக ஆடியதால் முதல் சில போட்டிகளில் ராகுல் தான் நான்காம் வரிசையில் ஆடினார். விஜய் சங்கருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. 

ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் காயமடைந்து தொடரிலிருந்து விலகிய பிறகு, ராகுல் தொடக்க வீரராக இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் விஜய் சங்கர் நான்காம் வரிசை வீரராக அணியில் இடம்பெற்றார். ஆனால் அந்த வரிசைக்கு அவர் அர்த்தம் சேர்க்கவில்லை. தன்னை நான்காம் வரிசையில் இறக்கியது சரியான முடிவுதான் என்பதை அவர் நியாயப்படுத்தவில்லை. 

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 29 ரன்கள் அடித்த விஜய் சங்கர், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக மிடில் ஓவர்களில் நின்று ஆடக்கூடிய வாய்ப்பு கிடைத்தும் அதை பயன்படுத்தி கொள்ளாமல் வெறும் 14 ரன்களில் நடையை கட்டினார். இனிவரும் போட்டிகள் முக்கியமானது என்பதால் நான்காம் வரிசை வீரர் சிறப்பாக ஆடியாக வேண்டும் என்ற நிலையில், நான்காம் வரிசை குறித்த விவாதம் மீண்டும் தொடங்கியுள்ளது. 

விஜய் சங்கருக்கு பதிலாக நான்காம் வரிசையில் ரிஷப் பண்ட்டை இறக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து ஐசிசிக்கு அவர் எழுதியுள்ள கட்டுரையில், ரிஷப் பண்ட் மாதிரியான ஒரு வீரரை நான்காம் வரிசையில் இறக்க வேண்டும். உலக கோப்பையில் நான்காம் வரிசையில் ஆட அவர் தயாராகிவிட்டதாகவே நான் நினைக்கிறேன். ஏனெனில் இங்கிலாந்தி ஏற்கனவே ஆடிய அனுபவம் கொண்டவர் என்பதால் அந்த கண்டிஷனை புரிந்துகொண்டு ரிஷப்பால் ஆட முடியும். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் அவர் சிறப்பாக ஆடினார். எனவே அவருக்கு பழக்கப்பட்ட எதிரணியான இங்கிலாந்துக்கு எதிராக அவரை இறக்கலாம். மிடில் ஆர்டரில் விஜய் சங்கரும் கேதர் ஜாதவும் பெரிதாக ஆடவில்லை என்று ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். 

ஆனால் அவசரப்பட்டு விஜய் சங்கரை நீக்கிவிட்டு ரிஷப் பண்ட்டை சேர்க்க வேண்டாம் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் ஆலோசனை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோருக்கு ஒரு ஆலோசனை வழங்கும் வகையில் ஒரு டுவீட் செய்துள்ளார். அதில், அன்புள்ள விராட் மற்றும் ரவி சாஸ்திரி அவர்களே, தயவு செய்து விஜய் சங்கரை அணியிலிருந்து நீக்கிவிடாதீர்கள். இங்கிலாந்துக்கு எதிரான நாளைய போட்டியை இந்திய அணிக்கு விஜய் சங்கர் வென்று கொடுப்பார் என்று நினைக்கிறேன். ரிஷப் பண்ட்டை அணியில் எடுப்பது குறித்து யோசிக்க வேண்டாம் என்று பீட்டர்சன் ஆலோசனை தெரிவித்துள்ளார். 
 

click me!