மொத்த டீமையும் கொத்தா தூக்கிய ஸ்பின்னர்.. ஃபைனலில் மோதும் அணிகள் கன்ஃபார்ம்

By karthikeyan VFirst Published Nov 1, 2019, 3:28 PM IST
Highlights

தியோதர் டிராபி தொடரில் இந்தியா ஏ மற்றும் இந்தியா சி அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஏ அணியை 232 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 
 

ராஞ்சியில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா சி அணியின் மயன்க் அகர்வால் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவருமே அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 226 ரன்களை குவித்தனர். மயன்க் அகர்வால் 120 ரன்களையும் ஷுப்மன் கில் 143 ரன்களையும் குவித்தனர். இவர்கள் அவுட்டான பீறகு, களத்திற்கு வந்த சூர்யகுமார் யாதவ், கடைசி 3 ஓவரில் காட்டடி அடித்து அணியின் ஸ்கோரை தாறுமாறாக உயர்த்தினார். 

கடைசி 3 ஓவர்களில் மட்டும் இந்தியா சி அணி 60 ரன்களை குவித்தது. அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய சூர்யகுமார் யாதவ் வெறும் 29 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 72 ரன்களை குவித்தார். மயன்க் அகர்வால், கில், சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அபாரமான பேட்டிங்கால் இந்தியா சி அணி 50 ஓவரில் 366 ரன்களை குவித்தது. 

367 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்தியா ஏ அணியில் எந்த வீரருமே சரியாக ஆடவில்லை. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். விஷ்ணு வினோத், அபிஷேக் சர்மா, ஹனுமா விஹாரி ஆகியோர் சுத்தமாக சோபிக்கவில்லை. தேவ்தத் படிக்கல் 31 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பார்கவி மேராய் 30 ரன்களும் இஷான் கிஷான் 25 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். முதல் தர மற்றும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிகமாக ஆடிய அனுபவம் கொண்ட சீனியர் ஸ்பின்னர் ஜலஜ் சக்ஸேனாவின் சுழலை தாக்குப்பிடிக்க முடியாமல் அவரிடம் விக்கெட்டுகளை மளமளவென இழந்தனர். 

விஷ்ணு வினோத்தின் விக்கெட்டை குல்கர்னியும் அபிஷேக் மற்றும் விஹாரியின் விக்கெட்டுகளை இஷான் போரெலும் வீழ்த்தினர். அவர்கள் மூவரைத்தவிர மற்ற 7 விக்கெட்டுகளையும் ஜலஜ் சக்ஸேனா தான் வீழ்த்தினார். ஜலஜின் சுழலில் 134 ரன்களுக்கே ஆல் அவுட்டானது இந்தியா ஏ அணி. இதையடுத்து 232 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது இந்தியா சி அணி. 

இந்தியா ஏ அணி இரண்டு போட்டிகளிலுமே தோற்றுவிட்டதால், இந்தியா பி மற்றும் இந்தியா சி ஆகிய இரண்டு அணிகளும் இறுதி போட்டியில் மோதுவது உறுதியாகிவிட்டது. இறுதி போட்டி வரும் 4ம் தேதி நடக்கவுள்ள நிலையில், நாளைய போட்டியிலும் பி மற்றும் சி அணிகள் தான் மோதவுள்ளன. 
 

click me!