
ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியில் தோனியுடன் நீண்டகாலம் இணைந்து ஆடிய ஃபாஃப் டுப்ளெசிஸ், தினேஷ் கார்த்திக்கை தோனியுடன் ஒப்பிட்டுள்ளார். சிஎஸ்கே அணியில் ஆடிவந்த ஃபாஃப் டுப்ளெசிஸ், இந்த சீசனில் ஆர்சிபி அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து, இந்த சீசனில் ஆர்சிபி அணி ஃபாஃப் டுப்ளெசிஸின் கேப்டன்சியில் ஆடிவருகிறது. முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸிடம் தோல்வியடைந்த ஆர்சிபி அணி, கேகேஆர் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி 128 ரன்கள் மட்டுமே அடித்தது கேகேஆர் அணி. 129 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய ஆர்சிபி அணி வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்ததால், இந்த எளிய இலக்கை கடைசி ஓவரில் தான் அடித்து வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் ஆர்சிபியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட, முதல் 2 பந்தில் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்ததால் ஆர்சிபி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான முதல் போட்டியிலும் நன்றாக பேட்டிங் ஆடிய தினேஷ் கார்த்திக், கேகேஆருக்கு எதிராகவும் நெருக்கடியான அழுத்தமான சூழலில் அபாரமாக ஆடி முடித்து கொடுத்தார்.
இந்நிலையில், ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ், கூலாக இருப்பதில் தினேஷ் கார்த்திக் தோனியை போன்றவர் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஃபாஃப் டுப்ளெசிஸ், 129 ரன்கள் என்ற இலக்கை முன்கூட்டியே அடித்து எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் எப்படி ஜெயித்தாலும் வெற்றி வெற்றிதான். தினேஷ் கார்த்திக்கின் அனுபவம் எங்கள் அணிக்கு கடைசியில் உதவியது. தினேஷ் கார்த்திக் கூலான, நிதானமான வீரர். ஐஸ் கூலாக இருப்பதில் தினேஷ் கார்த்திக் தோனியை போன்றவர் என்றார் ஃபாஃப் டுப்ளெசிஸ்.