இதெல்லாம் அநியாயம், அக்கிரமம்.. கிரிக்கெட் வரலாற்றுலயே இதுவரை இப்படி நடந்து நான் பார்த்ததே இல்ல.. கேப்டன் கோலி செம காட்டம்

By karthikeyan VFirst Published Dec 16, 2019, 11:10 AM IST
Highlights

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஜடேஜாவின் ரன் அவுட் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 
 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட்டின் பொறுப்பான மற்றும் அபாரமான பேட்டிங்கால் 50 ஓவரில் 287 ரன்களை குவித்தது. 

288 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹோப்பும் ஹெட்மயரும் இணைந்து மிக அருமையாக ஆடி சதமடித்து, வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றி பெற செய்தனர். ஹெட்மயரின் அதிரடியான சதம் மற்றும் ஹோப்பின் பொறுப்பான சதம் ஆகியவற்றின் விளைவாக 48வது ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ் அணி. 

இந்த போட்டியில் ஜடேஜாவின் ரன் அவுட்டில் ஒரு சர்ச்சை எழுந்தது. 48வது ஓவரில் ஒரு பந்தை அடித்துவிட்டு ஜடேஜா வேகமாக ரன் ஓடினார். அந்த பந்தை பிடித்த ரோஸ்டான் சேஸ், நேரடியாக ஸ்டம்பில் அடித்தார். மிகவும் க்ளோசான ரன் அவுட் அது. ஆனால் அதற்கு அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. தேர்டு அம்பயரையும் நாடவில்லை. 

கள நடுவர், டிவி அம்பயரை நாடாததை அடுத்து உடனடியாக அதற்கு எதிர்வினை ஆற்றாத கேப்டன் பொல்லார்டு, டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து சிக்னல் வந்ததும் அதன்பின்னர் அம்பயரிடம் , தேர்டு அம்பயரை நாடுமாறு பொல்லார்டு வாதிட்டார். வெஸ்ட் இண்டீஸ் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்தவர்கள், ரீப்ளேவை பார்த்துவிட்டு அது அவுட்டுதான் என்று தெரிந்ததும், பொல்லார்டிடம் தெரிவித்தனர். அதன்பிறகுதான் பொல்லார்டு, கள நடுவரிடம், டிவி அம்பயரிடம் கேட்குமாறு வலியுறுத்தினார். 

டிவி ரீப்ளேவில் அவுட் என்று உறுதியானதை அடுத்து ஜடேஜாவிற்கு அவுட் கொடுக்கப்பட்டு, அவர் வெளியேறினார். போட்டிக்கு பின்னர் இந்த சம்பவம் குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இந்த விஷயம் ரொம்ப சிம்பிள். ஃபீல்டர் அவுட் கேட்கிறார்; ஆனால் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. அத்துடன் அது முடிந்துவிட்டது. ஆனால் களத்திற்கு வெளியே இருந்து(டிரெஸ்ஸிங் ரூம்), டிவியில் ரிப்ளே பார்த்துவிட்டு அம்பயரிடம் ரிவியூ கேட்குமாறு வீரர்களுக்கு சிக்னல் கொடுக்கக்கூடாது. கிரிக்கெட்டில் இதுவரை இப்படியான சம்பவம் நடந்து நான் பார்த்ததில்லை. 

ரூல்ஸ் எல்லாம் என்ன ஆயிற்று என்று எனக்கு தெரியவில்லை. போட்டி நடுவரும் அம்பயர்களும், அந்த விவகாரத்தை திரும்ப பார்க்க வேண்டும். இதுபோன்ற விவகாரங்களுக்கு முடிவுகட்ட வேண்டும். களத்திற்கு வெளியே இருப்பவர்கள் களத்தில் இருப்பவர்களை வழிநடத்தக்கூடாது. இப்போது அதுதான் நடந்தது என்று கோலி மிகவும் காட்டமாக தெரிவித்தார். 

click me!