நீங்க பயப்படாதீங்க.. நாங்க என்ன செய்றோம்னு எங்களுக்கு நல்லா தெரியும்.. கேப்டன் கோலியின் மெசேஜ்

By karthikeyan VFirst Published Jan 18, 2020, 5:04 PM IST
Highlights

இந்திய அணியின் சில முடிவுகள் கடும் விமர்சனத்துக்கு ஆளாகிவரும் நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றிக்கு பிறகு, கேப்டன் கோலி ரசிகர்களுக்கும் நெட்டிசன்களுக்கும் ஒரு மெசேஜ் கூறியுள்ளார். 

இந்திய அணியில் பல்வேறு பரிசோதனை முயற்சிகள் செய்யப்பட்டுவருகின்றன. அவற்றில் ஒன்றுதான், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ராகுலை மூன்றாம் வரிசையில் இறக்கிவிட்டு கோலி நான்காம் வரிசையில் இறங்கியது. 

தவான் காயத்திலிருந்து மீண்டு வந்த நிலையில், ரோஹித்துடன் இணைந்து அவர் மீண்டும் தொடக்க வீரராக ஆடுகிறார். அதேவேளையில் கேஎல் ராகுலும் நல்ல ஃபார்மில் சிறப்பாக ஆடிவருகிறார். எனவே அவரையும் ஓரங்கட்ட முடியாது. அதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ராகுலை மூன்றாம் வரிசையில் இறக்கிவிட்டு கோலி நான்காம் வரிசையில் இறங்கினார். 

அணியின் நலன் மற்றும் எதிர்காலம் கருதி, தன்னலமற்ற கோலியின் முடிவு அனைவரின் பாராட்டையும் பெற்றது. அதேநேரத்தில் அவர் மூன்றாம் வரிசையில் ஆட வேண்டும்; அதுதான் அணிக்கு நல்லது என்ற கருத்தும் இருந்தது. 

Also Read - டி20யில் மட்டுமில்ல.. ஒருநாள் கிரிக்கெட்டிலும் கம்பேக் கொடுக்கும் டிவில்லியர்ஸ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ராகுல் மூன்றாம் வரிசையிலும் கோலி நான்காம் வரிசையிலும் இறங்கினர். அந்த போட்டியில் தவானும் ராகுலும் சற்று மந்தமாக ஆடியதால் கோலி களத்திற்கு வரும்போது ஸ்கோர் குறைவாக இருந்தது. அதனால் கோலி அடித்தாக வேண்டிய கட்டாயத்தில் அடித்து ஆட முயன்று 16 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பேட்டிங் ஆர்டர் அப்படியே சரிந்தது. இந்திய அணி 255 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 

அந்த போட்டியில் படுதோல்வியடைந்ததை அடுத்து, இரண்டாவது போட்டியில் கோலியே மூன்றாம் வரிசையில் இறங்கினார். கோலி வழக்கமான தனது பேட்டிங்கை ஆடி சிறப்பான இன்னிங்ஸை ஆடினார். ஐந்தாம் வரிசையில் இறங்கிய ராகுலும் சிறப்பாக ஆடி 80 ரன்களை குவித்து, இந்திய அணி 340 ரன்களை எட்டுவதற்கு காரணமாக திகழ்ந்தார். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றியும் பெற்றது. 

அதேபோல, முதல் போட்டியில் நவ்தீப் சைனிக்கு பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் எடுக்கப்பட்டதும் கடும் விமர்சனத்துக்குள்ளானது. இரண்டாவது போட்டியில் அந்த மாற்றமும் செய்யப்பட்டது. நவ்தீப் சைனியில் அணியில் எடுக்கப்பட்டார். இந்த இரண்டு மாற்றங்கள் குறித்தும் சமூக வலைதளங்களில் கடுமையாக விவாதிக்கப்பட்டதுடன், இந்த முடிவுகள் விமர்சனத்துக்கும் ஆளாகின. 

Also Read - அந்த இடத்துல தான் நாங்க தோற்றோம்.. தோல்விக்கு காரணம் சொல்லும் ஸ்மித்

இந்நிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் இதுகுறித்து பேசிய கேப்டன் விராட் கோலி, சோசியல் மீடியா ஆதிக்கம் செலுத்தும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் விவாதிப்பதுடன் விமர்சித்தும் விடுகின்றனர். கேஎல் ராகுலை அணியிலிருந்து ஒதுக்க முடியாது. அவர் இன்றைக்கு(இரண்டாவது போட்டி) எப்படி ஆடினார் என்று பார்த்திருப்பீர்கள். சர்வதேச போட்டியில் அவரது சிறந்த இன்னிங்ஸ் இதுதான். மிகவும் முதிர்ச்சியான கிளாசான பேட்டிங். நாங்கள் டிரெஸிங் ரூமில் என்ன செய்கிறோம், என்ன திட்டமிடுகிறோம்ம் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறோம். எனவே யாரும் பயப்பட தேவையில்லை என்று கேப்டன் கோலி தெரிவித்தார்.
 

click me!