பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி.. இதெல்லாம் ஆஸ்திரேலிய அணிக்கு அசால்ட்டு டார்கெட்

By karthikeyan VFirst Published Jan 14, 2020, 5:34 PM IST
Highlights

முதல் ஒருநாள் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி, ஆஸ்திரேலிய அணிக்கு 256 ரன்கள் என்ற எளிய இலக்கை நிர்ணயித்துள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடேவில் நடந்துவருகிறது. பகலிரவு போட்டியாக நடந்துவரும் இந்த போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச், இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 

தொடக்க வீரர் தவான் காயத்திலிருந்து மீண்டு மீண்டும் அணிக்கு திரும்பிவிட்ட அதேவேளையில், ராகுலும் நல்ல ஃபார்மில் இருப்பதால் இருவருமே அணியில் சேர்க்கப்பட்டனர். ரோஹித் - தவான் தொடக்க வீரர்களாகவும் ராகுல் மூன்றாம் வரிசையிலும் இறங்கினர். 

தொடக்க வீரர் ரோஹித் சர்மா, ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகளை விளாசினார். ஆனால் அதன்பின்னர் சற்று நிதானமாக ஆடிய ரோஹித் சர்மா, 15 பந்தில் 10 ரன்கள் மட்டுமே அடித்து ஸ்டார்க்கின் பந்தில் ஆட்டமிழந்தார். 

Also Read - தாதாவுக்கு நான் போட்ட கண்டிஷன்.. சேவாக் சொன்னதை கேட்டு சிரித்த கங்குலி

இதையடுத்து தவானுடன் ராகுல் இணைந்தார். இருவருமே மந்தமாக ஆடினர். ஒருவர் நிதானமாக ஆட, மற்றொருவர் அடித்து ஆடி ஸ்கோர் செய்திருக்க வேண்டும். ஆனால் இருவருமே மந்தமாக ஆடி மெதுவாக ஸ்கோர் செய்தனர். களத்தில் நிலைத்த பின்னர், வீணடித்த பந்துகளை ஈடுகட்டி விட்டாவது சென்றிருக்க வேண்டும். ஆனால் ராகுல் மற்றும் தவான் ஆகிய இருவருமே அதை செய்ய தவறிவிட்டனர். 

61 பந்துகள் பேட்டிங் ஆடி களத்தில் நிலைத்த ராகுல், அரைசதம் கூட அடிக்காமல் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்கம் முதலே மந்தமாக ஆடிய தவான், கடைசி வரை அதிரடியாகவே ஆடாமல் 91 பந்தில் 74 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 90 பந்துகள் பேட்டிங் ஆடி களத்தில் நிலைத்த வீரர், அணிக்கு எந்த வித நல்லதையும் செய்யாமல் அம்போனு விட்டுட்டு 74 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

Also Read - ரோஹித் பேட்டிங் ஆடுனா நான் டிவியை விட்டு நகரவே மாட்டேன்.. பாகிஸ்தான் லெஜண்ட் புகழாரம்

மும்பை வான்கடே பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம். அதுமட்டுமல்லாமல் இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவின் காரணமாக பந்துவீசுவதும் சவாலாக இருக்கும். எனவே முடிந்தவரை பெரிய ஸ்கோரை அடித்தாக வேண்டும். ஆனால் டாப் ஆர்டர்களோ மந்தமாக ஆடிவிட்டு சென்றதால், அழுத்தம் அதிகரித்தது. எனவே அடித்து ஆடியாக வேண்டிய கட்டாயத்தில் அடுத்தடுத்து பெரிய ஷாட்டுக்கு முயற்சித்த கேப்டன் கோலி, 14 பந்தில் 16 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ரிஷப் பண்ட்டும் ஜடேஜாவும் சேர்ந்து ஓரளவிற்கு அடித்து ஆடி ஸ்கோரை உயர்த்திவந்தனர். ஆனால் அவர்களையும் ஆஸ்திரேலிய பவுலர்கள் நிலைக்கவிடவில்லை. ஜடேஜாவை 25 ரன்களிலும் ரிஷப் பண்ட்டை 28 ரன்களிலும் முறையே கேன் ரிச்சர்ட்ஸன் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகிய இருவரும் வீழ்த்தினர். அதன்பின்னர் ஷர்துல் தாகூர் ஒன்றிரண்டு பவுண்டரிகளை அடித்து 13 ரன்களில் ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் 17 ரன்களில் 49வது ஓவரின் கடைசி பந்தில் ரன் அவுட்டாக, கடைசி ஓவரின் முதல் பந்தில் ஷமி ஆட்டமிழக்க, இந்திய அணி, 49.1 ஓவரில் 255 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

மும்பை வான்கடே ஆடுகளத்திற்கு இந்த ஸ்கோர் மிகவும் குறைவானது. ஃபின்ச், வார்னர், ஸ்மித், லபுஷேன், அலெக்ஸ் கேரி ஆகியோர் நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில், இந்த இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு மிகவும் எளிதானது. தொடக்கத்திலேயே விரைவில் சில விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே, ஆஸ்திரேலிய அணியின் வெற்றியை கொஞ்சம் தள்ளியாவது போட முடியும். இல்லையெனில் விரைவில் இந்த இலக்கை அடித்து வெற்றி பெற்றுவிடுவார்கள்.

click me!