
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியும், 3வது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்க அணி 2-1 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 4வது டி20 போட்டி இன்று ராஜ்கோட்டில் நடந்துவருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தென்னாப்பிரிக்க அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன.
இந்திய அணி:
இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஷ் கான்.
தென்னாப்பிரிக்க அணி:
டெம்பா பவுமா (கேப்டன்), குயிண்டன் டி காக், ட்வைன் பிரிட்டோரியஸ், வாண்டர் டசன், ஹென்ரிச் கிளாசன் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், மார்கோ யான்சென், கேஷவ் மஹராஜ், அன்ரிக் நோர்க்யா, லுங்கி இங்கிடி, டப்ரைஸ் ஷாம்ஸி.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட்வெறும் 5 ரன்னிலும், ஷ்ரேயாஸ் ஐயர் 7 ரன்னிலும் ஆட்டமிழக்க, இந்த தொடரில் நல்ல ஃபார்மில் அருமையாக ஆடிவரும் இஷான் கிஷனும் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மந்தமாக பேட்டிங் ஆடிய ரிஷப் பண்ட் 23 பந்தில் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
10 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு வெறும் 56 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. அதன்பின்னர் 13வது ஓவரின் 5வது பந்தில் தான் ரிஷப் பண்ட் ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் ஆட்டமிழந்ததையடுத்து 13 ஓவரில் 81 ரன்களுக்கு இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்தது.
அதன்பின்னர் இந்திய அணியின் சிறந்த ஃபினிஷர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்தனர். 15 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 96 ரன்களை அடித்திருந்தது. 16வது ஓவரில் தினேஷ் கார்த்திக் 2பவுண்டரிகளும், பாண்டியா ஒரு பவுண்டரியும் அடிக்க, 17வது ஓவரில் மீண்டும் தினேஷ் கார்த்திக் 3 பவுண்டரிகளை விளாசினார். 18வது ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் 2பவுண்டரிகள் அடித்தார் தினேஷ் கார்த்திக். 19வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த பாண்டியா 2வது பந்தில் ஆட்டமிழந்தார். பாண்டியா 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
20வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்து, சர்வதேச டி20 போட்டியில் தனது முதல் அரைசதத்தை பதிவுசெய்த தினேஷ் கார்த்திக், அடுத்த பந்திலேயே 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக்கின் அதிரடியான ஃபினிஷிங்கால் 20 ஓவரில் 169 ரன்களை குவித்த இந்திய அணி, 170 ரன்கள் என்ற சவாலான இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்துள்ளது.