#INDvsENG அஷ்வினின் அபாரமான பவுலிங்கில் 178 ரன்களுக்கு பொட்டளமான இங்கிலாந்து.! இந்தியாவுக்கு 420 ரன்கள் இலக்கு

By karthikeyan VFirst Published Feb 8, 2021, 4:28 PM IST
Highlights

முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் அடித்த இங்கிலாந்து அணியை, 2வது இன்னிங்ஸில் அஷ்வினின் அபாரமான பவுலிங்கால், 178 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி.
 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, ஜோ ரூட்டின் இரட்டை சதம்(218), சிப்ளி(87), ஸ்டோக்ஸின்(82) சிறப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் 578 ரன்களை குவித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் புஜாரா, ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூவர் மட்டுமே சிறப்பாக ஆடினர். புஜாரா 73 ரன்களும், ரிஷப் பண்ட் 91 ரன்களும், சுந்தர் 85 ரன்களும் அடித்தனர். இவர்கள் மூவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. ரோஹித், கோலி, ரஹானே ஆகிய நட்சத்திர வீரர்கள் சோபிக்கவில்லை. அதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 337 ரன்கள் மட்டுமே அடித்தது.

241 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸை முதல் பந்திலேயே வீழ்த்தி, விக்கெட் வேட்டையை தொடங்கிய அஷ்வின், அதன்பின்னர் இங்கிலாந்து பேட்டிங் ஆர்டரை சரித்தார்.

ஸ்பின்னிற்கு சாதகமான சென்னை சேப்பாக்கம் ஆடுகளம், 4ம் நாளான இன்றைய ஆட்டத்தில் ஸ்பின்னிற்கு ஒத்துழைப்பு கொடுத்தது. அதை நன்கு பயன்படுத்திக்கொண்ட அஷ்வின், அபாரமாக பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். வேகமாக ஸ்கோர் அடித்து மெகா இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயிக்கும் கட்டாயத்தில் இருந்த இங்கிலாந்து அணி, வேகமாக ஸ்கோர் செய்யும் முயற்சியில் விக்கெட்டுகளை இழந்தது.

ஜோ ரூட் அதிரடியாக ஆடி 32 பந்தில் 40 ரன்கள் அடித்தார். சிப்ளி, லாரன்ஸ், ஸ்டோக்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். போப் 28 ரன்னிலும், பட்லர் 24 ரன்னிலும் ஆட்டமிழக்க, டெய்லெண்டர்களை அடுத்தடுத்து அசால்ட்டாக வீழ்த்தினார் அஷ்வின். அதனால் வெறும் 178 ரன்களுக்கே 2வது இன்னிங்ஸில் சுருண்டது இங்கிலாந்து அணி.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அஷ்வின் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்ளி, ஸ்டோக்ஸ், டோமினிக் பெஸ், ஆர்ச்சர், ஆண்டர்சன் ஆகிய ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஷ்வின்.

இங்கிலாந்து அணி மொத்தமாக 419 ரன்கல் முன்னிலை பெற, 420 ரன்கள் என்ற இலக்கை, 4ம் நாள் ஆட்டத்தில் 17 ஓவர்கள் எஞ்சியிருந்தபோது, இந்திய அணி விரட்ட தொடங்கியது.
 

click me!