கோலிக்கு அடுத்து இந்தியாவின் முழுமையான பேட்ஸ்மேன் அவருதான்..! எல்லாவிதமான அணியிலும் அவரை கண்டிப்பா எடுக்கணும்

By karthikeyan VFirst Published Jul 27, 2021, 10:21 PM IST
Highlights

விராட் கோலிக்கு அடுத்து இந்திய அணியில் முழுமையான பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் தான் என்று ஹர்பஜன் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

உள்நாட்டு போட்டிகள் மற்றும் ஐபிஎல்லில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணி தேர்வாளர்களால் தன்னை புறக்கணிக்கமுடியாத சூழலை உருவாக்கினார் சூர்யகுமார் யாதவ்.

அதன்விளைவாக, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் முதல் முறையாக எடுக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், அந்த தொடரில் அபாரமாக ஆடினார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடிய சூர்யகுமார் யாதவ், முதல் ஒருநாள் போட்டியில் 32* ரன்கள், 2வது போட்டியில் 53 ரன்கள் மற்றும் 3வது போட்டியில் 40 ரன்கள் என 3 போட்டிகளிலும் அபாரமாக ஆடி தொடர் நாயகன் விருதை வென்றார்.

இதையடுத்து நடந்த முதல் டி20 போட்டியிலும் மந்தமான பிட்ச்சில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து அசத்தினார் சூர்யகுமார் யாதவ். ஒவ்வொரு போட்டியிலும் அபாரமாக ஆடி இந்திய அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துவிட்டார் சூர்யகுமார் யாதவ்.

ஃப்ளிக் ஷாட்டுகளை அபாரமாக ஆடக்கூடிய சூர்யகுமார் யாதவ், அனைத்து விதமான ஷாட்டுகளையும் நன்றாக ஆடக்கூடிய தெளிவான வீரர். பல விதமான ஷாட்டுகளை தன்னகத்தே கொண்ட சூர்யகுமார் யாதவ், மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிடக்கூடியவர். அதனால் இந்தியாவின் மிஸ்டர் 360 என்றும் அழைக்கப்படுகிறார்.

தொடர்ச்சியான தனது சிறப்பான பேட்டிங்கால் அனைவரையும் கவர்ந்துள்ள சூர்யகுமார் யாதவை முன்னாள் வீரர்கள் பலரும் புகழ்ந்துவருகின்றனர். 

அந்தவகையில் சூர்யகுமார் யாதவ் குறித்து பேசியுள்ள ஹர்பஜன் சிங், சூர்யகுமார் யாதவை கடந்த பல ஆண்டுகளாக நான் பார்த்துவருகிறேன். நான் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தியபோது சூர்யகுமார் சின்ன பையன். ஆனால் இப்போது, விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு அடுத்த இந்தியாவின் முழுமையான பேட்ஸ்மேன் சூர்யகுமார்.

கடந்த சில ஆண்டுகளில் ஒரு பேட்ஸ்மேனாக அவர் வளர்ந்த விதத்தை நான் உற்று கவனித்திருக்கிறேன். ஃபாஸ்ட் பவுலிங்கை எதிர்கொள்ள அவருக்கு நிறைய நேரம் இருக்கிறது. ஸ்பின் பவுலிங்கையும் அருமையாக ஆடுவார். டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியோ அல்லது ஒருநாள் அணியோ, டெஸ்ட் அணியோ அவரை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
 

click me!