கொரோனா பீதிக்கு மத்தியில் ஐபிஎல்: என்னைவிட பெரிய சுயநலவாதி இருக்கமுடியாது! மனசுல உள்ளதை நேர்மையா சொன்ன ஹர்பஜன்

By karthikeyan VFirst Published Mar 29, 2020, 3:01 PM IST
Highlights

கொரோனா அச்சுறுத்தலால் நாடே பீதியில் உள்ள நிலையில், கிரிக்கெட்டை பற்றியெல்லாம் யோசிக்கவே முடியவில்லை என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
 

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்துவருகிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1000ஐ நெருங்கிவிட்டது. கொரோனாவிற்கு 25 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா இந்தியாவில் சமூக தொற்றாக பரவாமல் தடுக்க ஏப்ரல் 14ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.

கொரோனாவால் உலகப்பொருளாதாரமே முடங்கியுள்ளது. உலகில் எந்தவிதமான சமூக பொருளாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் முற்றிலுமாக முடங்கியுள்ளது. 

கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் போட்டிகள் உட்பட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வரும் ஜூலை மாதம் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கியிருக்க வேண்டிய ஐபிஎல் தொடர், ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னரும் தொடங்குவது சந்தேகம் தான். 

இந்நிலையில், அதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரும் சிஎஸ்கே அணி வீரருமான ஹர்பஜன் சிங், உண்மையை சொல்ல வேண்டுமானால், கொரோனா பீதிக்கு மத்தியில் கடந்த 15 நாட்களாக கிரிக்கெட்டை பற்றி நான் யோசிக்கவேயில்லை. நாட்டின் நலனுக்கு முன், கிரிக்கெட்டெல்லாம் ஒரு விஷயமே கிடையாது. 

இப்படிப்பட்ட நெருக்கடியான மற்றும் இக்கட்டான சூழலில் நான் ஐபிஎல்லை பற்றி யோசித்தால் பெரிய சுயநலவாதியாகிவிடுவேன். அதைப்பற்றி நான் யோசிக்கவேயில்லை. நாட்டு மக்கள் நலனுடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பதே இப்போதைக்கு முக்கியம். நாட்டு மக்கள் நன்றாக இருந்தால்தான் விளையாட்டுகளையே நடத்த முடியும். இந்த நேரத்தில் நாட்டின் நலனுக்காக மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, மீண்டும் இயல்புநிலைக்கு திரும்ப ஒத்துழைப்பு தர வேண்டும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

click me!