சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் ஜடேஜா மட்டுமல்லாது ஹர்பஜன் சிங் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோரும் கலந்துகொள்ளவில்லை.
ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. வரும் 20ம் தேதி அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்கின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அனைவரும் அந்த நெறிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும்.
சிஎஸ்கே அணி மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கிளம்புவதற்கு முன்பாக, சென்னையில் ஒரு வாரம் வீரர்களுக்கு பயிற்சி முகாம் நடத்துகிறது. தோனி, ரெய்னா, பியூஷ் சாவ்லா, தீபக் சாஹர், கரன் ஷர்மா, கேதர் ஜாதவ் உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் சென்னையில் பயிற்சி முகாமை தொடங்கியுள்ளனர்.
ஆனால் ஜடேஜா, ஹர்பஜன் சிங் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய மூவரும் இந்த பயிற்சி முகாமில் கலந்துகொள்ளவில்லை. சொந்த காரணங்களுக்காக ஜடேஜா, பயிற்சி முகாமில் கலந்துகொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியிருந்தது. தோனி, ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் நேற்றே சென்னை வந்தடைந்தனர்.
இந்நிலையில், அணியின் சீனியர் ஸ்பின்னரான ஹர்பஜன் சிங் மற்றும் இளம் ஃபாஸ்ட் பவுலர் ஷர்துல் தாகூர் ஆகியோரும் பயிற்சி முகாமில் கலந்துகொள்ளவில்லை. இவர்களும் சொந்த காரணங்களால் தான் பயிற்சி முகாமில் இணைய முடியாமல் போனது. ஹர்பஜன் சிங் வரும் 19ம் தேதி சிஎஸ்கே முகாமில் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹர்பஜன் சிங், ஜடேஜா, ஷர்துல் தாகூர் ஆகியோர் ஏற்கனவே தன்னிச்சையாகவே பயிற்சியை தொடங்கிவிட்டதால், அவர்கள் பயிற்சி முகாமிற்கு வராததால் எந்த பாதிப்பும் இல்லை என்று சிஎஸ்கே அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.