Shubman Gill: பஞ்சாப்பை பொளந்து கட்டிய சுப்மன் கில் – 199 ரன்கள் குவித்த குஜராத் டைட்டன்ஸ்!

By Rsiva kumarFirst Published Apr 4, 2024, 9:48 PM IST
Highlights

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியானது 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்துள்ளது.

அகமதாபாத் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 17ஆவது ஐபிஎல் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங் செய்தது. விருத்திமான் சகா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

இதில், சகா 11 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 22 பந்துகளில் 4 பவுண்டரி உள்பட 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சாய் சுதர்சன் களமிறங்கினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சாய் சுதர்சன் 6 பவுண்டரி உள்பட 33 ரன்களில் ஆட்டமிழந்தார். விஜய் சங்கர் 8 ரன்களில் வெளியேறினார். கடைசியில் சுப்மன் கில் மற்றும் ராகுல் திவேதியா இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.

இதில், சுப்மன் கில் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 19ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். 30 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து விளையாடினார். இறுதியில் கில் 48 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் 89 ரன்கள் எடுத்ததன் மூலமாக இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதற்கு முன்னதாக சுனில் நரைன் எடுத்த 85 ரன்கள் அதிகபட்சமாக இருந்தது. தற்போது கில் அந்த சாதனையை முறியடித்து 89* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியானது 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கில் பஞ்சாப் அணிக்கு எதிராக 65*, 57, 57, 9, 7, 96, 9, 67, 52* மற்றும் 89* (17ஆவது லீக் போட்டி பஞ்சாப் அணி) என்று டீசண்டான ஸ்கோர் எடுத்திருக்கிறார்.

click me!