ஆர்சிபிக்கு முதல் முறையாக கோப்பையை வென்று கொடுக்க ஆர்வமாக உள்ளதாக க்ளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக ஆடும்போது அடித்து துவம்சம் செய்யும் மேக்ஸ்வெல், ஐபிஎல் என்று வந்தால், பொட்டிப்பாம்பாய் அடங்கிப்போகிறார். கடந்த சீசனில் 11 இன்னிங்ஸ்களில் வெறும் 15.42 என்ற சராசரி மற்றும் 101.88 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் மொத்தமாகவே வெறும் 108 ரன்கள் மட்டுமே அடித்தார். இதையடுத்து அவரை பஞ்சாப் அணி கழட்டிவிட்டது.
ரூ.2 கோடி என்ற அடிப்படை விலையுடன் ஏலத்தில் விடப்பட்ட க்ளென் மேக்ஸ்வெல் மீது சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் ஆர்வம் காட்டின. மேக்ஸ்வெல் ஐபிஎல்லில் கடந்த சில சீசன்களாகவே சரியாக ஆடவில்லை என்றாலும், அவர் நல்ல ஃபினிஷர் என்ற வகையில், அதற்கான தேவையிருக்கும் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி ஆகிய இரு அணிகளும் அவர் மீது நம்பிக்கை வைத்து அவருக்காக கடும் போட்டியிட்டன.
கடைசியில் ரூ.14.25 கோடிக்கு மேக்ஸ்வெல்லை ஆர்சிபி ஏலத்தில் எடுத்தது. அண்மையில் மேக்ஸ்வெல், விராட் கோலியின் கேப்டன்சியின் கீழ் ஆர்சிபியில் ஆடும் தனது ஆர்வத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் விரும்பியபடியே அவரை ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்தது.
இந்நிலையில், ஆர்சிபி அணியில் எடுக்கப்பட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட க்ளென் மேக்ஸ்வெல், எனக்கு கிடைத்த ஆதரவு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. விராட் கோலியின் கேப்டன்சியிலும், டிவில்லியர்ஸுடனும் ஆடவிருப்பது உற்சாகமளிக்கிறது. ஆடம் ஸாம்பா மற்றும் கேன் ரிச்சர்ட்ஸன் ஆகிய எனது 2 நண்பர்களும் அங்கிருக்கிறார்கள். மும்பை இந்தியன்ஸ் அணியில் என்னுடன் இருந்த எனது பழைய நண்பர் சாஹலும் இருக்கிறார். ஆர்சிபி அணிக்கு முதல் முறையாக கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.