நாங்க வெளிநாட்டுல கொடி நாட்டுன காலத்துல நீயெல்லாம் பொறக்கவே இல்ல தம்பி.. தாதாவை புகழ்ந்த கோலியை தாறுமாறா திட்டிய கவாஸ்கர்

By karthikeyan VFirst Published Nov 25, 2019, 12:01 PM IST
Highlights

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி மட்டுமே, ஏதோ இந்திய அணிக்கு வெற்றிகளை குவித்து கொடுத்தாற்போல, அவரை புகழ்ந்ததற்காக கேப்டன் கோலியை கடுமையாக சாடியுள்ளார் கவாஸ்கர். 
 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலோச்சுகிறது. இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாட்டுகளிலும் வெற்றிகளை குவித்து நம்பர் 1 அணியாக கெத்தாக வலம்வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்ற இந்திய அணி, இந்தியாவில் வைத்து தென்னாப்பிரிக்காவையும், அதைத்தொடர்ந்து தற்போது வங்கதேசத்தையும் ஒயிட்வாஷ் செய்து டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. 

இந்த மூன்று தொடர்களிலும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் என தொடர்ச்சியாக மொத்தம் 4 டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. 

இந்திய அணிக்கு அதிகமான வெற்றிகளை குவித்து கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக கோலி திகழ்கிறார். கோலி தலைமையில் இந்திய அணி பல சாதனைகளை படைத்துவருகிறது. வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதன்முறையாக இந்திய அணி பகலிரவு டெஸ்ட் போட்டியாக ஆடிய இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் அபார வெற்றி பெற்றது. 

போட்டிக்கு பின்னர் பேசிய கேப்டன் கோலி, டெஸ்ட் கிரிக்கெட் என்பது மனரீதியான போராட்டம். டெஸ்ட் கிரிக்கெட்டை அணுகும் முறையையும் ஆதிக்கம் செலுத்துவதையும் தாதா தலைமையிலான அணியிடமிருந்துதான் கற்றுக்கொண்டோம். தாதா தலைமையிலான அணிதான் எங்களுக்கு முன்னோடி. அவர் காட்டிய வழியில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று கோலி தெரிவித்தார். 

கேப்டன் கோலியின் கருத்து, முன்னாள் கேப்டனும் லெஜண்ட் பேட்ஸ்மேனுமான கவாஸ்கரை கடுமையாக பாதித்துள்ளது. கவாஸ்கரின் கோபத்தை அவர் வெளிப்படையாக பேசியதிலிருந்தே தெரிந்துகொள்ள முடியும். அந்தளவிற்கு உடனடியாக கோலிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார். 

கோலியின் கருத்து குறித்து பேசிய கவாஸ்கர், வங்கதேசத்துக்கு எதிராக பிங்க் பந்தில் ஆடி பெற்ற வெற்றி மிகச்சிறப்பானது. அதேநேரத்தில் நான் இந்த இடத்தில் ஒரு விஷயத்தை கண்டிப்பாக பதிவு செய்தாக வேண்டும். இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகளை குவித்து ஆதிக்கம் செலுத்துவதை தொடங்கிவைத்தது தாதா தான் என்று கூறினார். தாதா பிசிசிஐயின் தலைவராக இருப்பதால், அவரை கௌரவப்படுத்த வேண்டும் என்பதற்காக கோலி புகழ்ந்து பேசியிருக்கலாம். ஆனால், இந்திய அணி 1970-80களிலேயே வெற்றிகளை குவித்துள்ளது. அப்போதெல்லாம் கோலி பிறக்கவேயில்லை. 

கோலி மட்டும் இல்லை.. நிறைய பேர் 2000ம் ஆண்டில்தான் இந்திய கிரிக்கெட் வெற்றி பாதையில் நடைபோட தொடங்கியதாக நினைக்கிறார்கள். ஆனால் 1970களிலேயே இந்திய அணி வெளிநாடுகளில் வெற்றிகளை குவித்துள்ளது. 1986ல் வெளிநாட்டில் தொடரை வென்றுள்ளது, தொடரை டிரா செய்துள்ளது என்று காட்டமாக தெரிவித்தார். 

கவாஸ்கர் குறிப்பிட்ட அந்த காலக்கட்டம் அவர் ஆடியது. எப்போதும் தாதா, தல என்று மட்டுமே புகழ்ந்துகொண்டிருந்தால், அவருக்கும் கடுப்பாகத்தானே செய்யும்.. அதுதான் தனது ஆதங்கத்தை மொத்தமாக கொட்டித்தீர்த்துவிட்டார். 
 

click me!