ஒரு இந்திய கேப்டன் இப்படிலாம் நடந்துக்கக்கூடாது..! முதிர்ச்சியில்லாத கேப்டன் கோலி.. கம்பீர் கடும் விளாசல்

By karthikeyan VFirst Published Jan 14, 2022, 7:30 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், களத்தில் அத்துமீறிய கோலியின் செயல்பாட்டால் முன்னாள் வீரர்கள் பலரும் அதிருப்தியடைந்த நிலையில், கோலியை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார் கௌதம் கம்பீர்.
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில், 223 ரன்களும், தென்னாப்பிரிக்க அணி 210 ரன்களும் அடித்தன.

13 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, ரிஷப் பண்ட்டின் சதத்தால் 198 ரன்கள் அடித்தது. மொத்தமாக இந்திய அணி 211 ரன்கள் முன்னிலை பெற்று, 212 ரன்கள் என்ற இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது. 212 ரன்கள் என்ற இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி, 2-1 என டெஸ்ட் தொடரை வென்றது.

இந்த போட்டியில் 2வது இன்னிங்ஸின் போது, தென்னாப்பிரிக்க கேப்டனும் தொடக்க வீரருமான டீன் எல்கர் 22 ரன்களுடன் களத்தில் இருந்தபோது அஷ்வின் வீசிய பந்தை கால்காப்பில் வாங்கினார் எல்கர். கள நடுவர் எராஸ்மஸ் அதற்கு அவுட் கொடுத்தார். எல்கர் அதை ரிவியூ செய்தார். கிட்டத்தட்ட ஃபுல் லெந்த்தில் விழுந்த அந்த பந்து, பால் டிராக்கிங்கில் அதிக பவுன்ஸ் ஆகி ஸ்டம்ப்புக்கு மேல் செல்வதாக காட்டியது. அதனால் டீன் எல்கர் தப்பினார்.

அந்த பந்து அதிக பவுன்ஸ் ஆனதை இந்திய வீரர்களால் நம்ப முடியவில்லை. கள நடுவரே அதிர்ச்சிதான் அடைந்தார். அதனால் கடும் அதிருப்தியடைந்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஸ்டம்ப் மைக்கிடம் சென்று, உங்கள் அணி(தென்னாப்பிரிக்கா) வீரர்களும் பந்தை சேதப்படுத்துகின்றனர். அதையும் கொஞ்சம் பாருங்கள். எதிரணி மீதே கவனம் செலுத்தாமல் இருபக்கமும் நியாயமாக நடந்துகொள்ளுங்கள் என்றார் கோலி.

இதையடுத்து, இந்திய அணியின் 11 வீரர்களுக்கு எதிராக ஒரு நாடே செயல்படுவதாக கேஎல் ராகுல் கூறினார். அதற்கு, “கேமராமேன்களும் தான்” என கோலி கூறினார்.

கோலியின் இந்த செயலால் முன்னாள் வீரர்கள் பலரும் கடும் அதிருப்தியடைந்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள கௌதம் கம்பீர், விராட் கோலியின் செயல் படுமோசமானது. ஸ்டம்ப் மைக்கில் அவர் பேசிய செயல், அவரது முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. ஒரு சர்வதேச அணியின் கேப்டன் இப்படி செய்யக்கூடாது. அதிலும் இந்திய கேப்டன் கண்டிப்பாக செய்திருக்கக்கூடாது. டெக்னாலஜி நமது கையில் இல்லை. ஆனால் டீன் எல்கர் அதுமாதிரியான சம்பவங்களுக்கு கோலியை போல் ரியாக்ட் செய்யவில்லை. இதுமாதிரி நடந்துகொண்டால் ரோல் மாடலாக இருக்கமுடியாது. உடன் விளையாடும் வீரர்களே இதையெல்லாம் விரும்பமாட்டார்கள். இப்போது பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட், கேப்டனாக இருந்தபோது இதுமாதிரி எல்லாம் நடந்துகொள்ளமாட்டார். இதுமாதிரியான நடத்தைகளை விரும்பவும் மாட்டார். எனவே டிராவிட் இதுதொடர்பாக கோலியுடன் பேசவேண்டும் என்று கம்பீர் தெரிவித்தார்.
 

click me!