ஒரு கேப்டனாக கோலிக்கு எல்லா உரிமையும் இருக்கு.. தாதா தடாலடி

By karthikeyan VFirst Published Aug 1, 2019, 11:23 AM IST
Highlights

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் தேர்வு குறித்து ஒரு கேப்டனாக தனது கருத்தை கூட விராட் கோலிக்கு முழு உரிமை இருக்கிறது என்று முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துடன் முடிவடைகிறது. 

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் மற்றும் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் பயிற்சியாளர்களுக்கான பதவிக்காக விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ. இதையடுத்து ஜெயவர்தனே, டாம் மூடி, மைக் ஹெசன் ஆகியோர் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதுகுறித்த எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. 

ஜாண்டி ரோட்ஸ் ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கும் ராபின் சிங் தலைமை பயிற்சியாளர் பதவிக்கும் விண்ணப்பித்துள்ளனர். கபில் தேவ், கெயிக்வாட், சாந்தா ரங்கசாமி அடங்கிய குழு, ஆகஸ்ட் மாத மத்தியில் தலைமை பயிற்சியாளருக்கான நேர்காணலை நடத்தவுள்ளது.

கடந்த முறையை போல இந்த முறை பயிற்சியாளர் தேர்வு குறித்து கேப்டன் கோலியின் கருத்து கேட்கப்படமாட்டாது என்பது ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு விட்டது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு கிளம்பும் முன் செய்தியாளர்களை சந்தித்த கோலியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, இதுவரை என்னிடம் எந்த கருத்தும் கேட்கப்படவில்லை. என்னுடைய ஆதரவு சாஸ்திரிக்குத்தான். சாஸ்திரியே தலைமை பயிற்சியாளராக தொடர வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் என்று கோலி தெரிவித்திருந்தார். 

கோலி பேசியது குறித்து தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் கிரிக்கெட் ஆலோசனை குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான கெய்க்வாட்டிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கெய்க்வாட், கேப்டன் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் ஒரு கமிட்டி. தலைமை பயிற்சியாளரை எதனடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் என்று சில வரையறைகள் உள்ளன. அதனடிப்படையில் நாங்கள் தேர்வு செய்வோம். இந்தியாவை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது பல வெளிநாட்டு முன்னாள் வீரர்களும் விண்ணப்பித்துள்ளனர். நேர்காணல் நடத்தி தகுதியானவரை தேர்வு செய்வோம் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கெய்க்வாட்டின் கருத்து குறித்து முன்னாள் கேப்டன் கங்குலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கங்குலி, ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி குணாதிசயங்கள் கொண்டவர்கள். எனவே அவர் கூறியிருப்பது குறித்து நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் கேப்டன் என்ற முறையில், கோலி அவரது விருப்பத்தை தெரிவிக்க அவருக்கு உரிமை இருக்கிறது என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

click me!