எங்களுக்கு ஒரு நியாயம்.. தோனிக்கு ஒரு நியாயமா..? இது என்ன அநியாயம்..? தாறுமாறா தெறிக்கவிடும் கம்பீர்

By karthikeyan VFirst Published Jul 19, 2019, 12:07 PM IST
Highlights

தோனியின் ஓய்வு குறித்த விவாதம் வலுத்துள்ள நிலையில், தனது வலுவான கருத்தை வழக்கம்போலவே அதிரடியாக முன்வைத்துள்ளார் கவுதம் கம்பீர். 

உலக கோப்பையுடன் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோனி இன்னும் அதுகுறித்து வாய்திறக்கவில்லை. உலக கோப்பை தோல்வியை அடுத்து, அடுத்த உலக கோப்பையை மனதில் வைத்து இந்திய அணியை உருவாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அணி நிர்வாகத்திற்கும் தேர்வுக்குழுவிற்கும் உள்ளது. 

தோனி ஓய்வு குறித்து எதுவும் பேசாத நிலையில், தோனியை அணியில் எடுப்பது குறித்து சிந்தக்கவில்லை. எனவே தோனி அவராகவே ஓய்வு பெறுவது நல்லது. இல்லையெனில் அவரை ஓரங்கட்ட வேண்டிவரும் என்கிற ரீதியில் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்திருந்தார். 

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு ரிஷப் பண்ட் தான் முதன்மை விக்கெட் கீப்பர் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் வெளிப்படையாக தெரிவித்த தகவல் வெளியானது. இந்திய அணிக்கு இனிமேல் ரிஷப் பண்ட் தான் முதன்மை விக்கெட் கீப்பர். தோனி 15 பேர் கொண்ட அணியில் வேண்டுமானால் இருப்பார். ஆனால் ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்பேயில்லை என்று பிசிசிஐ அதிகாரி தெரிவித்ததாக தகவல் வெளிவந்தது. 

இதன்மூலம் தோனி அவரது ஓய்வு முடிவை அவரே அறிவிக்க வேண்டும் என்பதற்காக பிசிசிஐ நெருக்கடி கொடுப்பது தெரிகிறது. ஆனால் தோனி இதற்கெல்லாம் மசியவேயில்லை. இந்நிலையில் ஒரு விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட சேவாக், கம்பீர் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். 

அப்போது, தோனிக்கு இனிமேல் அணியில் இடமில்லை என்றால், அதை அவரிடம் தேர்வாளர்கள் நேரடியாக தெரிவித்துவிட வேண்டும் என்று சேவாக் தெரிவித்தார். 

தோனி ஓய்வு குறித்து பேசிய கம்பீர், தோனி அவராக ஓய்வு பெற வேண்டுமென்றால் எதிர்பார்த்தால் அது இப்போதைக்கு நடக்காது. அணியின் நலன் கருதி அணி நிர்வாகமும் பிசிசிஐயும் தான் முடிவெடுக்க வேண்டும். 2015 உலக கோப்பையை கருத்தில்கொண்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறி சச்சின், சேவாக் மற்றும் எனக்கு அணியில் இடமில்லை என்று தெரிவித்தார். 2012ல் ஆஸ்திரேலியாவில் நடந்த சி.பி தொடரில் எங்களுக்கு அணியில் இடம் இல்லை என்றார். ஆஸ்திரேலிய மைதானங்கள் பெரியவை. எனவே இளம் வீரர்கள் தேவை என்று எங்களை ஓரங்கட்டினார். அதனால் அணியின் நலம்தான் முக்கியம் என்பதால் நடைமுறை பலனளிக்கும் முடிவுகளை உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் எடுக்க வேண்டும். 

ரிஷப் பண்ட், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன் ஆகியோர் உள்ளனர். இந்திய அணியில் இவர்களுக்கு விக்கெட் கீப்பராக வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஒரு வீரரை குறைந்தது ஒன்றரை ஆண்டு ஆடவைத்துத்தான் முடிவெடுக்க வேண்டும். அப்படி செய்தால் அடுத்த உலக கோப்பையில் ஆடப்போகும் விக்கெட் கீப்பரை முடிவு செய்துவிடலாம் என்று கம்பீர் தெரிவித்துள்ளார். 

click me!